புல்வாமா தாக்குதலின் கடைசி நிமிட வீடியோக்கள் உண்மையா ?
பரவிய செய்தி
தீவிரவாத தாக்குதலின் கடைசி நிமிடங்கள் .
மதிப்பீடு
சுருக்கம்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலின் போது எடுக்கப்பட்ட கடைசி நிமிடங்கள் என பரவும் இரண்டு விதமான வீடியோக்களும் தவறானதே.
விளக்கம்
காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் இறந்தது நாட்டு மக்களுக்கு நீங்கா கவலையை அளித்துள்ளது. இத்தருணத்தில், இறந்த வீரர்கள் பற்றிய செய்தியும், அவர்களின் புகைப்படங்களும் அதிகம் பதிவிடப்படுகிறது.
மேலும், காரில் 350 கிலோ வெடி மருந்துடன் வந்து தற்கொலை தாக்குதல் எவ்வாறு நடந்தது என்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி கொண்டு இருக்கிறது. வாட்ஸ் ஆஃப், ஃபேஸ்புக் என இந்த இரண்டு வீடியோக்களும் புல்வாமா தாக்குதலின் கடைசி நிமிட வீடியோக்கள் எனக் கூறி பகிர்கின்றனர்.
ஆனால், புல்வாமா தாக்குதலின் வீடியோ என பரவும் இரண்டு வீடியோவும் தவறானவையே. பிற நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை காஷ்மீரில் நிகழ்ந்ததாக பதிவிட்டு வருகின்றனர்.
முதல் வீடியோ : (எகிப்து)
2017 -ல் எகிப்து நாட்டில் 100 கிலோ வெடி மருந்துடன் வந்த காரை ராணுவ பீரங்கி தடுத்ததோடு, அங்கிருந்த 50 மக்களின் உயிரையும் காப்பாற்றியுள்ளது. எனினும், இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட சிலர் உயிரிழந்தனர்.
சினாய் பெனிசுலாவின் பாதுகாப்பு சோதனைச்சாவடியை தற்கொலை தாக்குதல் நிகழ்த்த இருந்த போது அங்கிருந்த பீரங்கி அந்த காரினை முழுவதுமாக நசுக்கி உள்ளது. பின் அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்ற பிறகு கார் வெடித்து உள்ளது.
ஆனால், கார் வெடித்த காட்சியை மட்டும் எடுத்து இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடந்த போது எடுக்கப்பட்டது எனத் தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
இரண்டாவது வீடியோ : (ஈராக் )
புல்வாமா தாக்குதல் என பகிர்ந்த மற்றொரு வீடியோ ஈராக் நாட்டில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம். 2007 ஆம் ஆண்டில் செப்டம்பர் 2-ம் தேதி ஈராக் நாட்டில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தின் போது பதிவான வீடியோ இந்தியாவில் நடந்ததாக பகிரப்படுகிறது.
இந்த வீடியோ 2008-ல் youtube channel ஒன்றில் பதிவாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவின் மேலே 2007 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர மற்றொரு வீடியோவும் புதிதாக பரவி வருகிறது. ஆனால், இந்த கார் வெடிப்பு சம்பவம் துருக்கி எல்லையில் சிரியா பாதுகாப்பு சோதனைச்சாவடியில் நிகழ்ந்ததாக youtube-ல் பதிவிடப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் தெரியாமலும், தெரிந்தும், அரசியல் லாபத்திற்கும் பதிவிடப்படுகிறது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் செய்திகளை பகிர்பவர்கள் முடிந்தவரை செய்தி உண்மையா என அறிந்து பகிரவும்.
மேலும் படிக்க : இந்திய வீரர்கள் மரணத்திலும் அரசியல் லாபத்திற்காக வதந்திகள் !
உதவ நினைப்பவர்கள் : இறந்த வீரர்களுக்கு நிதி அளிக்க சரியான தளம் எது ?