பஞ்சாபில் மொத்த பாஜக எம்எல்ஏகளும் காங்கிரஸில் இணைந்ததாக வதந்தி !
பரவிய செய்தி
பஞ்சாபில் மொத்த பிஜேபி MLA-களும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இப்போது பிஜேபி இல்லாத பஞ்சாப்.
மதிப்பீடு
விளக்கம்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 3 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும், தற்போது பாஜக இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாறியதாக ஓர் தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
பஞ்சாப் மாநிலத்தின் மொத்த பாஜக எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது செய்தியோ வெளியாகவில்லை. மேலும், பஞ்சாபில் 3 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறும் தகவல் தவறானது. தற்போது பஞ்சாபில் அருண் நராங் மற்றும் தினேஷ் சிங் என 2 பாஜக எம்எல்ஏக்களே உள்ளனர். இவ்விருவரும் கட்சி மாறவில்லை.
” நான் பஞ்சாபில் பாஜக சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாகி இருக்கிறேன். தற்போதும் என் கட்சியிலேயே இருக்கிறேன். நான் காங்கிரசில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானது ” என சுஜான்பூர் பாஜக எம்எல்ஏ தினேஷ் சிங் இந்தியா டுடேவிற்கு பதில் அளித்து இருக்கிறார்.
பஞ்சாப் பாஜக எம்எல்ஏக்கள் அருண் நராங் மற்றும் தினேஷ் சிங் ஆகிய இருவருமே சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலை மறுத்துள்ளனர். ஆனால், இந்தியா அளவில் பஞ்சாப் பாஜக எம்எல்ஏக்கள் மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும், பாஜக இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாறியதாகவும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.