கர்நாடகாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையின் கூட்டம் எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம்
பரவிய செய்தி
இது ராகுலுக்காக கர்நாடகா மாநிலத்தில் கூடிய கூட்டம்
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலம் பெல்லாரி(Bellary) மாவட்டத்தில் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடா யாத்திரையில் மக்கள் வெகு திரளாகக் கலந்துக்கொண்டுள்ளனர் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வைரலாகப் பரப்பி வருகின்றனர்
உண்மை என்ன ?
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த 2022 அக்டோபர் 14ம் தேதி கர்நாடக மாநிலம் பெல்லாரி(Bellary) மாவட்டத்தை வந்தடைந்தது. அக்டோபர் 15ம் பெல்லாரியில் நடந்தப் பேரணி குறித்துப் பாரத் ஜோடோ யாத்திரை எனும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வைரலான புகைப்படம் அதில் பதிவு செய்யப்படவில்லை.
LIVE: Public Meeting | Ballari | Karnataka#BharatJodoYatra https://t.co/GBSHncUISP
— Bharat Jodo (@bharatjodo) October 15, 2022
வைரலான புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜிங் சர்ச் செய்து பார்த்ததில், பல ஆண்டுகளாகவே இந்தப் புகைப்படம் இணையத்தில் இருப்பது தெரிய வந்தது. அதில், 2010ம் ஆண்டு Milost.sk எனும் இணையத்தளம் “Fenomén Reinhard Bonnke” எனும் தலைப்பில் இப்புகைப்படத்துடன் ஒரு கட்டுரையை பதிவிட்டுள்ளது.
Slovak மொழியில் இருந்தக் கட்டுரையை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்ததில், ” உலகப் புகழ்பெற்ற சுவிசேஷகர் ரெய்ன்ஹார்ட் போன்கே தனது 50 ஆண்டுகாலச் சேவையை இறைவனுக்குக் கொண்டாடியதாக ” நீண்ட வாக்கியம் ஒன்று எழுதப்பட்டிருந்தது.
2020 ஏப்ரல் மாதம் 17ம் தேதி ரெய்னஹார்ட போன்கே(Reinhard Bonnke’s) என்பவரின் முகநூல் பக்கத்தில், வைரலான புகைப்படம் 2002ம் ஆண்டு நைஜீரியா நாட்டின் ஓகிபோமோஸோ(Ogbomoso) எனும் இடத்தில் எடுக்கப்பட்டதாகப் பதிவிடப்பட்டிருந்தது. ரெய்னஹார்ட போன்னகே(Reinhard Bonnke’s) ஜெர்மனியை சேர்ந்த மதப் போதகர். இவருடைய இணையதளத்திலும் வைரலான புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதிலிருந்து, கர்நாடகாவின் பாரத் ஜோடோ யாத்திரையில் எடுக்கப்பட்டது எனச் சமூகவலைத்தளங்களில் வைரலான புகைப்படம் பல ஆண்டுகளாகவே இணையத்தில் பரவி வருவது தெரிய வருகிறது.
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கர்நாடகாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது 2002ம் நைஜீரியா நாட்டில் ரெய்னஹார்ட போன்னகே(Reinhard Bonnke’s) எனும் மத போதகர் கூட்டத்தில் எடுக்கப்பட்டது எனத் தெரிய வருகிறது.