‘இந்து தெய்வமான சக்தியை அவமதித்த ராகுல்காந்தி’ என பொய் பரப்பும் அண்ணாமலை!

பரவிய செய்தி

சனாதன தர்மத்திற்கு எதிராக தொடங்கிய யாத்திரை அதே போன்று முடிவடைந்தது. திரு ராகுல் காந்தி “அம்மனுக்கு” எதிரான தனது தொடர்ச்சியான கருத்துகளை இனி புறக்கணிக்க முடியாது. அவர் தமிழ்நாடு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டிருந்த நிலையில், பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில் மீண்டும் மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான தனது பயணத்தை ‘பாரத் ஜோடோ நியாய யாத்ரா’ என்ற பெயரில் ஜனவரி 14 அன்று ராகுல்காந்தி தொடங்கியிருந்தார்.

இந்த பாரத் ஜோடோ நியாய யாத்ரா பயணமும் முடிவடைந்தநிலையில், மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் மார்ச் 16 அன்று நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, “இந்து தர்மத்தில் சக்தி என்ற சொல் இருக்கிறது, சக்திக்கு எதிராக நாம் போராடுவோம்” என்று பேசிய 15 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் இந்த வீடியோவை, ராகுல்காந்தி கிறிஸ்த்துவ மத போதகர் ஒருவருடன் அமர்ந்துகொண்டு, ஏசு கிறிஸ்து உண்மையான கடவுள் என்று ராகுல் கூறுவது போன்று உள்ள மற்றொரு வீடியோவுடன் இதை ஒப்பிட்டு, இந்து தெய்வமான சக்தியை ராகுல்காந்தி அவமதித்துமிட்டார். அவர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி பதிவு செய்துள்ளதையும் காண முடிகிறது.

மேலும் இது குறித்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கூட்டணியினர் சக்திக்கு எதிராக உள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மகளும் சக்தி தான். நான் அவர்களை சக்தியின் வடிவாக பார்க்கிறேன். அவர்கள் சக்தியை அழிக்க நினைத்தால், இந்த சக்திகளுக்கு எதிராக எதுவும் நடக்கவிடாமல் என்னுடைய வாழ்க்கையை சக்தியை பாதுகாத்ததற்காகவே நான் அர்பணிக்கிறேன்” என்பது போன்று பேசியுள்ள வீடியோவையும் காண முடிகிறது.

இது குறித்த பதிவை தமிழ்நாடு பாஜகவின் எக்ஸ் பக்கத்திலும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ய, ராகுல் காந்தி பேசிய முழு வீடியோவை ஆய்வு செய்து பார்த்தோம். இந்திய தேசிய காங்கிரஸின் யூடியூப் பக்கத்தில் மார்ச் 17 அன்று ராகுல்காந்தி இது தொடர்பாக பேசிய முழு வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் சரியாக வீடியோவின் 5:05 வது நிமிடத்தில் பேசிய அவர், “இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது. நாங்கள் சக்திக்கு எதிராக போராடுகிறோம். கேள்வி என்னவென்றால், சக்தி என்றால் என்ன? ராஜாவின் ஆன்மா EVM இல் உள்ளது. இது உண்மைதான். ராஜாவின் ஆன்மா EVM மற்றும் நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்திலும், ED, CBI மற்றும் வருமான வரித் துறைகளிலும் உள்ளது.

மூத்த தலைவர் அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை. இந்த மாநிலத்தைச் சேர்ந்த (மகாராஷ்டிரா) மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸை விட்டு வெளியேறி, என் அம்மாவின் முன் கதறி அழுதார், ‘சோனியா ஜி, இந்த சக்தியை எதிர்த்துப் போராட எனக்கு வலிமை இல்லை என்று நான் வெட்கப்படுகிறேன். நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை. மேலும் அவர் மட்டுமல்ல… ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி மிரட்டப்பட்டுள்ளனர். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்படி என்ன விட்டுச் சென்றார்கள் என்று நினைக்கிறீர்கள்? நான் சொன்ன ‘சக்தி‘. அவர்கள் கழுத்தை நெரித்து பிஜேபிக்கு அழைத்துச் செல்கிறது, அனைவரும் பயந்து வெளியேறினர்” என்று ராகுல் காந்தி அதில் பேசியிருப்பதைக் கேட்க முடிகிறது.

அதில் ராகுல் காந்தி பல முறை ‘சக்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். சக்தி என்ற சொல்லுக்கு “பலம்” (Power) என்ற பொருளும் உண்டு. அவர் தனது முழு உரையில், ED, CBI மற்றும் வருமான வரித்துறை போன்ற அரசு நிறுவனங்களையும், இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களையும் தான் சக்தி என்று குறிப்பிட்டுள்ளார். இந்து தெய்வமான சக்தியை எந்த இடத்திலும் அவர் அவமதிக்கமில்லை. “நாம் சக்திக்கு எதிராக போராடவேண்டும்” என்று பேசிய வீடியோவின் ஒரு சிறுபகுதியை மட்டும் எடுத்து சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர். அவர் இங்கு குறிப்பிட்ட சக்தியின் (Power) பொருளே வேறு.

மேலும் ராகுல் ஹிந்தியில் பேசிய வீடியோவின் ஒரு பகுதியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கில வசனங்களுடன் (Subtitles) இணைத்து கீழே பதிவுசெய்துள்ளோம்.

மேலும் சக்தி குறித்த பாஜகவின் தவறான கூற்றுக்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள ராகுல்காந்தி, “நான் எந்த வகையான மத சக்தியைப் பற்றியும் பேசவில்லை, ஆனால் அநீதி, ஊழல் மற்றும் பொய்யின் சக்தியைப் பற்றி பேசினேன். பிரதமர் மோடி என்னுடைய பேச்சை தவறாக புரிந்துகொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டு பதிவுசெய்துள்ளதையும் காண முடிகிறது.


முடிவு:

நம் தேடலில், “நாம் சக்திக்கு எதிராக போராடவேண்டும்” என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோவின் ஒரு சிறுபகுதியை மட்டும் எடுத்து சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர். இந்து தெய்வமான சக்தியை எந்த இடத்திலும் அவர் அவமதிக்கமில்லை. அவர் இங்கு குறிப்பிட்ட சக்தியின் (Power) பொருளே வேறு என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader