ராகுல் காந்தியுடன் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என வதந்தி !
பரவிய செய்தி
இங்கு முதலில் உள்ள போட்டோ:- வெளிமாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் சிலரை கான்கிராஸ் ராகுல் சந்தித்தது. இரண்டாவதாக உள்ள போட்டோ:- முதல் போட்டோவில் வெளிமாநில பெண் என்ற பெயரில் நடித்து ஷூட்டிங் முடிந்தவுடன் தனது காரில் புறப்பட்டு சென்ற போட்டோ.
மதிப்பீடு
விளக்கம்
ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசும் புகைப்படங்கள் தற்போது இந்திய அளவில் வைரலாகி வருகிறது. அதனுடன், முதல் புகைப்படத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் போல் நடித்து விட்டு இரண்டாவது புகைப்படத்தில் காரில் செல்லும் காட்சி என பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
ராகுல் காந்தி போலியான நபர்களை வைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் என விளம்பரம் தேடிக் கொள்வதாக பரப்பி வருகிறார்கள். இப்படி இந்திய அளவில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
சாலையோரம் அமர்ந்து இருக்கும் மக்களிடம் ராகுல் காந்தி பேசும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் பிளைஓவர் அருகே இருந்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக மே 17-ம் தேதி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
Delhi: Congress leader Rahul Gandhi interacted with migrant labourers who were walking near Sukhdev Vihar flyover to return to their home states. Party volunteers later arranged vehicles to take them to their homes. A labourer, Monu says “Coming from Haryana,have to go to Jhansi” pic.twitter.com/SMbnejiZpK
— ANI (@ANI) May 16, 2020
2020 மே 16-ம் தேதி ANI செய்தியின் ட்விட்டர் பக்கத்தில், ” தங்களின் மாநிலங்களுக்கு செல்வதற்கு டெல்லி சுக்தேவ் விஹார் பிளைஓவர் அருகே நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். பின்னர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்து தந்தனர். ஹரியானாவில் இருந்து வருவதாகவும், ஜான்சி செல்வதாகவும் தொழிலாளி மோனு கூறியதாக ” வெளியாகி இருக்கிறது. ஏஎன்ஐ ட்வீட் பதிவில், ராகுல் காந்தி தொழிலாளர்களிடம் பேசும் புகைப்படம் மற்றும் அவர்கள் காரில் செல்லும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
சாலையோரத்தில் இருந்த 25 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ராகுல் காந்தி ஏற்பாடு செய்ததாக மே 16-ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமை வீடியோ வெளியிட்டு உள்ளது. அதில், வைரலான புகைப்படத்தில் இருப்பவர்கள் செல்லும் காட்சிகளை காணலாம்.
முடிவு :
நமது தேடலில், ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்திக்காமல் போலியான ஆட்களை வைத்து விளம்பரம் தேடுவதாக பரப்பப்படும் தகவல் தவறானது. பரப்பப்படும் புகைப்படங்களில் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்களே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களை சொந்த ஊர்களுக்கு காரில் அனுப்பும் முயற்சியை தவறாக சித்தரித்து பரப்பி வருகிறார்கள் என அறிய முடிந்தது.