ராகுல் காந்தி தோசை பற்றிப் பேசியதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

பரவிய செய்தி

தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி போன்ற கோமாளிகளை அழைத்து வரும்போது, நீங்கள் கேட்பது இதுதான்.

X link

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, கோவை செட்டிபாளையத்தில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசினார். 

அந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியது குறித்து பாஜக ஆதரவாளர் கிருஷ்ண குமார் வீடியோ ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் தோசை குறித்துப் பேசியது போல் உள்ளது. 

அந்த வீடியோவில் ‘நீங்கள் தோசை பிடிக்கும் என்கிறீர்கள். நீங்கள் இங்கு வந்து தமிழ்நாட்டு மக்களிடம் தோசை பிடிக்கும் எனச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களுக்குத் தோசை பிடிக்கும் எனச் சொல்கிறீர்கள்’ என ராகுல் பேசியது போல் உள்ளது.

உண்மை என்ன? 

ராகுல் காந்தி தோசை குறித்துப் பேசியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதுபோல் இருந்ததையடுத்து  இந்நிகழ்ச்சியின் முழு வீடியோவை தேடினோம். 

இதன் முழு வீடியோ ’M.K. STALIN’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் 35வது நிமிடத்திற்கு மேல் ராகுல் காந்தி பேசுகிறார். அவர் பேசுவதை திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

ராகுல் காந்தி பேசியது, ’உங்களுக்கென்று வரலாறு உள்ளது. உங்களது வரலாறு எனது கண்முன்னால் ஓடிக் கொண்டுள்ளது. பெரியார், அண்ணாதுரை, காமராஜர், கலைஞர் அவர்கள் எல்லாம் தங்களின் அறிவாற்றல் மூலம் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்கள். அவர்கள்தான் உண்மையான தலைவர்கள். அவர்கள் பேசியதை உலகமே பேசியது. காரணம் அவர்கள் பேசியது உள்ளத்தில் இருந்து. தற்போது தமிழ்நாட்டில் இருந்து மோடி, அதானி, ஆர்.எஸ்.எஸ். பற்றி கேள்வி கேட்கிறார்கள். முதல் கேள்வி எதற்காக எங்கள் வரலாற்றை, மொழியை, பாரம்பரியத்தை அவதூறாகப் பேசுகிறீர்கள்’ என்று கூறுகிறார். 

அதனைத் தொடர்ந்து, ’நீங்கள் இங்கு வந்து எனக்குத் தோசை பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் டெல்லிக்குத் திரும்பிய பின்னர் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி எனப் பேசுகிறீர்கள்ஏன் ஒரே மொழி? ஏன் தமிழ், பெங்காலி, கன்னடம் என மற்ற மொழிகளுக்காக நீங்கள் பேசக் கூடாது. இங்கு வந்து தோசை பிடிக்கும் என்கிறீர்கள். ஆனால், இங்கிருந்து போனதும் இந்த கலாச்சாரத்தையும் மொழியையும் அவதூறாகப் பேசுகிறீர்கள். நீங்கள் தோசை பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள். இளைஞர்களுக்கு வேலை இல்லை. GST கொண்டுவந்து மக்களை வாட்டி வதைக்கிறீர்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக மோசமான நிலைமைகளை நாடு சந்தித்தது. மோடி ஜீ உங்களுக்குத் தோசை மட்டுமல்ல வடை கூட பிடிக்கலாம். ஆனால், அதுவல்ல இப்போது பிரச்சனை. தமிழ் மொழி பிடிக்குமா என்பதுதான் பிரச்சனை’ என்று கூறியுள்ளார். 

மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு விஷயத்தைப் பேசுகிறார். பிறகு டெல்லிக்குச் சென்றதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான விஷயங்களை முன்னெடுக்கிறார் என்கிற அர்த்தத்தில் ராகுல் பேசியுள்ளார். அவர் பேசியதை எடிட் செய்து தோசையைப் பற்றி ராகுல் பேசியுள்ளதாகத் தவறாகப் பரப்புகின்றனர். 

ராகுல் காந்தி குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு : 

ராகுல் காந்தி தோசை குறித்துப் பேசியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு தவறாகப் பரப்பப்படுகிறது. மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவதையும் பிறகு டெல்லி சென்று நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராகச் செயல்படுவதையும் பற்றியே ராகுல் பேசியுள்ளார்.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader