இந்தியாவின் சொத்துக்களை சிறுபான்மையினருக்கு பிரித்துக் கொடுப்போம் என ராகுல் காந்தி சொன்னதாக பரவும் பொய்!

பரவிய செய்தி

இந்திய முழுவதும் சொத்துக்களை கணக்கெடுத்து பிரித்து மைனாரிட்டி மக்களுக்கு கொடுப்போம்என்று தெலுங்கானா கூட்டத்தில் பப்பு பேசியது. இதை அனைவருக்கும் ரீடுவிட் செய்யுங்கள். தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்… (ஹிந்தி படிக்கவிடாமல் செய்ததன் விளைவு)

X link

மதிப்பீடு

விளக்கம்

ராகுல் காந்தி தெலங்கானாவில் பேசும் போது இந்தியா முழுவதும் உள்ள சொத்துக்களை கணக்கெடுத்து அதை சிறுபான்மையின மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம் எனக் கூறியதாக வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.  

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் காங்கிரஸ் கட்சியின் லோகோ இருப்பதை காண முடிகிறது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில், இதே வீடியோ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் நேற்றைய தினம் பதிவிடப்பட்டுள்ளது. தெலங்கானாவில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய முழு வீடியோ அக்கட்சியின் அதிகாரப் பூர்வ யூடியூப் பக்கத்திலும் கடந்த 8ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 

ராகுல் காந்தி தெலங்கானாவில் பேசியதின் சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து, ’நாட்டின் சொத்துக்களை சிறுபான்மையினருக்கு பிரித்து கொடுக்க இருப்பதாக ராகுல் பேசி உள்ளார்’ எனப் பொய் செய்தி வலதுசாரிகளால் பரப்பப்பட்டது. அந்த முழு வீடியோவில் ராகுல் என்ன பேசியுள்ளார் என sub title-வுடன் நமது ஆங்கில தளத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 

அப்படி ராகுல் பேசிய வீடியோவிற்கு தமிழில் sub title-வுடன் காங்கிரஸ் கட்சி வீடியொ பதிவிட்டுள்ளது. அதில், ”நாங்கள் வாக்கு கொடுத்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தெலுங்கானாவில் செய்வது போல் ஜாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் செய்வோம் என்று. தேசம் முழுவதும் எக்ஸ்ரே எடுப்போம்… அது நமக்கு தெரிவிக்கும் எது பால் எது தண்ணீர் என்று… பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், பொதுப் பிரிவில் இருக்கும் ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர்களின் பங்கு என்ன என்று தெரிய வரும். இதன் பிறகு பொருளாதார மற்றும் நிறுவனங்கள் சார்ந்த கணக்கெடுப்பு செய்வோம். அப்போது நமக்கு தெரிய வரும் இந்தியா யாருடைய கையில் இருக்கிறது எந்த வர்க்கத்தின் கையில் இருக்கிறது என்று. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகரமான செயலுக்குப்பிறகு நாங்கள் கணக்கெடுப்பு நடத்தி, அதன் பிரகாரம் உங்கள் பங்குகளை உங்களுக்கு பகிர்ந்து அளிப்போம். அது ஊடகங்களாக இருந்தாலும் இந்தியாவின் அரசியல் அமைப்பு நிறுவனங்களாக இருந்தாலும் உங்களுக்கு இடம் உருவாக்கி உங்களுடைய பங்கை உங்களுக்கு வழங்குவோம்” என்றுள்ளது. 

அதாவது, ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அவரவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்போம் என்றும் பொருளாதார மற்றும் நிறுவனங்கள் சார்ந்த கணக்கெடுப்பின் மூலம் அது யார் கையில் உள்ளது என்பதை கண்டறிந்து அதை அனைவருக்கும் கிடைக்க செய்வோம் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார். அவர் பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியினர், பொதுப் பிரிவு ஏழை, சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களைப் பற்றியும் பேசியதை சிறுபான்மையினர் பற்றி மட்டும் பேசியதாக தவறாக பரப்புகின்றனர். 

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பல இடங்களில் ராகுல் காந்தி பேசி வருகிறார். அதே போல் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையிலும் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஓபிசி, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் அதிகளவில் நியமிக்கப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பிரநிதித்துவம் அளிக்கும் முயற்சிதான் இது. ஆனால், இவற்றை வலதுசாரிகளும் பாஜகவினரும் மத ரீதியாக திசை திருப்புகின்றனர். 

மேலும் படிக்க : இந்திய வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கே’ என்று மன்மோகன்சிங் கூறியதாக பொய் பரப்பும் பிரதமர் மோடி !

இதேபோல் பரப்பப்பட்ட தவறான செய்திகள் பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமையா? தவறாக திரித்துப் பரப்பும் பாஜகவினர்!

முடிவு: 

நாட்டின் சொத்துக்களை சிறுபான்மையினருக்கு பிரித்து கொடுப்பதாக ராகுல் காந்தி பேசியுள்ளார் எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. ஜாதிவாரி,  கணக்கெடுப்பின் மூலம் அவரவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்போம் என்றும் பொருளாதார மற்றும் நிறுவனங்கள் சார்ந்த கணக்கெடுப்பின் மூலம் அது யார் கையில் உள்ளது என்பதை கண்டறிந்து அதை அனைவருக்கும் கிடைக்க செய்வோம் என்றும் ராகுல் காந்தி பேசியதை தவறாக பரப்புகின்றனர். 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader