சட்டப்பிரிவு 370 நீக்கியதை கொண்டாடிய இளைஞர் இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டாரா ?

பரவிய செய்தி
370 சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப்பெற்றதை கொண்டாடிய இராஜஸ்தான் இளைஞரை அடித்துக்கொன்ற இசுலாமிய பயங்கரவாதிகள்.
மதிப்பீடு
விளக்கம்
மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசு காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-ஐ திரும்பப்பெற்றதை கொண்டாடிய இளைஞரை இஸ்லாமியர்கள் அடித்தே கொன்றதாக ” தேச விரோதிகள் ” எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இந்த பதிவின் உண்மைத்தன்மைக் குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
राजस्थान में @RSSorg के कुछ कार्यकर्ता धारा 370 खत्म होने खुशी मना रहे थे। तभी 15 से 20 मुश्लिम वहाँ पहुँचे और हिंदुओ के साथ मारपीट की। इतने में मुसलमानों ने गोलियां चला दी जिसमें ऋषिराज जिंदल की मौके पर ही मौत हो गई
R/T करे @AmitShah@ashokgehlot51@rsprasad pic.twitter.com/sG5aDV6pku
— Abhishek Azad (@abhishukla_2020) August 8, 2019
ராஜஸ்தானில் இளைஞர் கொல்லப்பட்டது குறித்த பதிவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். முதலில் அந்த பதிவில் இருந்த புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் செர்ச் செய்து பார்க்கையில் reddit என்ற தளத்தில் முகநூலில் பகிரப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு ” 26-year-old Bajrang Dal activist killed by Jihadi elements over loud music in Jhalawar ” என இடம்பெற்று இருந்தது. அதனுடன், hinduexistence என்ற இணையதளத்தின் செய்தி லிங்க் இணைக்கப்பட்டு இருந்தது.
அதில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜஹாலவார் பகுதியில் 26 வயதான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர் பிறந்தநாள் விழா மற்றும் காஷ்மீர் கொண்டாட்டத்தின் போது அதிக ஒலியை எழுப்பியதற்காக ஜிகாதிகளால் கொல்லப்பட்டார் என செய்தி வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக முதன்மை செய்தி ஊடகங்களில் ஏதேனும் செய்திகள் வெளியாகி இருக்கிறதா எனத் தேடுகையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் இணையதளத்தில் ” 26-year-old man killed over loud music in Rajasthan’s Jhalawar ” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 7-ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜஹாலவார் மாவட்டத்தின் பைரவா நகரில் இருந்த விடுதிக்கு வெளியே சாலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 10.30 மணியளவில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ரிஷிராஜ் ஜிண்டால் மற்றும் அவரின் 15-20 நண்பர்கள் டிஜே இசை அமைத்து, பட்டாசுகளை வெடித்து அதிக சத்தத்துடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். விடுதிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த இம்ரான் மற்றும் அவரின் மூன்று சகோதரர்கள் இரவில் அதிக சத்தத்தை ஏற்படுத்தியதற்காக இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்ட பொழுது இம்ரான் என்பவர் தன் வீட்டிற்கு சென்று துப்பாக்கியை எடுத்து வந்து ரிஷிராஜ் என்ற இளைஞரின் நெஞ்சில் சுட்டு உள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ரிஷிராஜ் ஜிண்டால் இறந்து விட்டார் என போலீஸ் அதிகாரி ராம் மூர்த்தி ஜோஷி தெரிவித்து இருக்கிறார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான தேடலில் முக்கிய குற்றவாளியான இம்ரானை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்பாக இம்ரான் கொலை வழக்கில் 15 ஆண்டுகள் சிறையில் தண்டனை பெற்றவர் என போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளது.
முடிவு :
hinduexistence என்ற இணையதளத்தை தவிர பிற முதன்மை ஊடகங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கியதற்கு கொண்டாடிய இளைஞர் இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டார் என குறிப்பிடவில்லை. hinduexistence செய்தியிலும் கூட பிறந்தநாள் கொண்டாட்டம் எனக் கூறி உடன் காஷ்மீர் விவகாரத்தையும் இணைத்து உள்ளனர். அதில் மட்டும் இந்த புகைப்படம் இணைக்கப்பட்டு உள்ளது.
பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ரிஷிராஜ், இம்ரான் என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார், ஆனால் சமூக வலைதள பதிவுகளில் இஸ்லாமியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என குறிப்பிட்டு உள்ளனர்.
கொலை வழக்கில் இம்ரானை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே கொலை குற்றவாளியான இம்ரான் தண்டிக்கப்பட வேண்டியவர். எனினும், இதுபோன்று கோப உணர்வை தூண்டும் பதிவுகளால் குழப்பத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்காமல் இருக்க முடிந்தவரை மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.