ரஜினிகாந்த் தன் சொத்துக்களை தமிழ் மக்களுக்கு உயில் எழுதினாரா ?
பரவிய செய்தி
ரஜினிகாந்த் தமிழ் மக்களுக்கு தன் சொத்துக்கள் முழுவதையும் உயில் எழுதிக் கொடுத்துள்ளார். தன் வாழ்க்கைக்கு பிறகு தனது அனைத்து சொத்துக்களும் தமிழ் மக்களுக்கே தான் என்று கூறியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தை மட்டுமே ட்ரஸ்ட்க்கு எழுதி தருவதாக அறிவித்தார். அதில், இருந்து கிடைக்கும் வருமானம் ட்ரெஸ்ட் மூலம் எளிய மக்களுக்கு செல்லும், தன் குடும்பத்தினருக்கு செல்லாது என அறிவித்ததை முழு சொத்தையும் அறிவித்ததாக தவறான செய்திகள் பரவி வருகிறது.
விளக்கம்
ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்த சில நாட்களில் அவருடைய உயில் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.
ரஜினிகாந்த் தமிழ் மக்களுக்கு தன் சொத்து முழுவதையும் உயில் எழுதிக் கொடுத்தார். என் வாழ்க்கைக்கு பிறகு எனது அனைத்து சொத்துக்களும் தமிழக மக்களுக்கு தான் போகும், என் சொத்தில் இருந்து ஒரு பைசா கூட என் குடும்பத்திற்கு போகாது. அனைத்தும் தமிழ் மக்களுக்கு தான் போகும் என்று ரஜினிகாந்த் உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற படையப்பா படத்தின் வெள்ளிவிழாவில் தனது உயில் பற்றி கூறியது யாதெனில், “ என் பெயரில் உள்ள இந்த ஒன்றே கால் ஏக்கர் அளவுள்ள ராகவேந்திர மண்டபத்தை ராகவேந்திரா பப்ளிக் ட்ரஸ்ட்டுக்கு உயில் எழுதி தருகிறேன். தனது வாழ்க்கைக்கு பிறகு இந்த சொத்தில் வரும் அனைத்தும் வருமானமும் ட்ரஸ்ட்டுக்கு போகும். அதிலிருந்து அனைத்தும் தன்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு செல்லும். அதில் ஒரு பைசாக் கூட எனது குடும்பத்திற்கு செல்லாது” என்று கூறியுள்ளார்.
அன்றைய காலக்கட்டத்தில் தனது சொத்தில் பாதி மதிப்புடைய ராகவேந்திரா மண்டபத்தை ராகவேந்திரா ட்ரஸ்ட்டுக்கு அளிப்பதாகக் கூறியதை, தனது சொத்துக்கள் முழுவதையும் தமிழக மக்களுக்கு அளிப்பதாக தவறாக எண்ணியுள்ளனர்.