ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் குறித்து மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாகப் பரவும் பழைய செய்தி !
பரவிய செய்தி
மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி. மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன் – நடிகர் ரஜினிகாந்த்
மதிப்பீடு
விளக்கம்
பொதுவாக, தனது திரைப்படங்கள் வெளியாகும் தருணங்களில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பேசுவதுண்டு. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சி தொடங்கி அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ” ஜெயிலர் ” திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகி அறிவிப்பும் வெளியாகி விட்டது. இந்நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளேன் எனக் கூறியுள்ளதாக தினமலரின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
திமுக ஏற்பாட்டின் படி அதிமுகவில் சிறிய பிளவு முடிந்தது!
அடுத்து இந்து ஓட்டுக்களை,ஆன்மிக ஓட்டுக்களை பாஜக வசம் போகாத வண்ணம் தடுக்க அசைன் மெண்ட் கொடுக்கப் பட்டு விட்டது!
“ஆள்பவரின்” காசு 300 கோடி
“அருணாச்சலம்” கைக்கு வந்தாச்சு!
“அண்ணாமலையை” பலவீனமாக்க தயாராகிட்டார்@rajinikanth pic.twitter.com/PwmrWXaLzn— பரமபதநாதன் (@parampatanatan1) July 13, 2022
தற்போது புதிய படம் தொடங்க இருப்பதால் மீண்டும் அரசியல் வருகை குறித்து ரஜினிகாந்த் பேசி இருப்பதாக இந்த நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். ரஜினிகாந்திற்கு ஆதரவான நிலைபாட்டில் இருக்கும் பாஜகவைச் சேர்ந்தவர்களும் கூட இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்பட தொடர்பான செய்திகளே வெளியாகி வருகின்றன. அவர் அரசியல் ஆலோசனையில் இருப்பதாகவோ, மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாகவோ செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி pic.twitter.com/Irg2iqnGxO
— Dinamalar (@dinamalarweb) July 12, 2021
வைரல் செய்யப்படும் தினமலரின் நியூஸ் கார்டு குறித்து தேடிய போது, 2021 ஜூலை 12-ம் தேதி “மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி” என தினமலர் சமூக ஊடக பக்கங்களில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலையில் பேசிய ரஜினிகாந்த், ” மக்கள் மன்றத்தின் எதிர்காலப் பணிகள் என்ன என்று கேள்விகள் உள்ளன. எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா ? மாட்டேனா ? என்கிற கேள்வியும் உள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் எனக் கூறியதாக ” செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாக பரவும் செய்தி கடந்த ஆண்டு ஜூலை வெளியானது. பழைய நியூஸ் கார்டை தற்போது தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.