ராஜீவ் காந்தியை பாதுகாக்க எஸ்.பி.ஜி தவறுதலாக பிச்சைக்காரரைச் சுட்டுக் கொன்றதா ?
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
1986-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ராஜ்காட் பகுதியில் மகாத்மா காந்தியின் சமாதிக்கு மரியாதை செலுத்த சென்ற போது அவரை பாதுகாக்க புதரில் இருந்த பிச்சைக்காரரை சிறப்பு பாதுகாப்பு குழு(எஸ்.பி.ஜி) சுட்டதால் உயிரிழந்ததாகவும், அதுபோன்ற நிலை பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக நிகழக் கூடாது என்பதற்காக அவர் திரும்பி சென்றதாக 1.58 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ ஆனது 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ” Rajiv Gandhi Is Shot ” எனும் தலைப்புடன் AP Archive யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் வீடியோ பதிவின் நிலைத்தகவலில், 1986-ம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த மகாத்மா காந்தியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது, கேசபோவில் மறைந்து இருந்த சீக்கியர் ஒருவர் சுடப்பட்டார். அந்த நபர் பிடிபட்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்ட உடன் பாதுகாப்பு வீரர்கள் ஓடிச் சென்று அந்த நபரை கண்டுபிடித்தனர். கரம்ஜித் சிங் எனும் அந்த நபர் கீழே இறக்கப்பட்டார். அதன்பிறகு ராஜீவ் காந்தி சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் ” என இடம்பெற்றுள்ளது.
ராஜ்கட் பகுதியில் ராஜீவ் காந்தியின் சிறப்பு பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து 1986 அக்டோபர் 31-ம் தேதி வெளியான செய்தியின் முழு தகவலையும் பதிப்பை 2014-ல் இந்தியா டுடே வெளியிட்டு இருக்கிறது. அதில், கரம்ஜித் சிங் துப்பாக்கி ஏந்தியதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இச்சம்பவத்தின் போது யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், 6 பேர் காயமடைந்து உள்ளனர். அப்போதே அவர் கைது செய்யப்பட்டார். ராஜீவ் காந்தியை கொலை செய்ய முயன்ற கரம்ஜித் சிங் 2016-ல் Living India news எனும் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், 1986-ல் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற ராஜீவ் காந்தி சென்ற போது சிறப்பு பாதுகாப்பு குழுவினர் புதரில் இருந்த பிச்சைக்காரரைச் சுட்டுக் கொன்றதாக பரவும் தகவல் தவறானது. கையில் துப்பாக்கியுடன் இருந்த நபரை நோக்கியே சுட்டுள்ளனர் மற்றும் அவரை உயிருடன் பிடித்துள்ளனர் என அறிய முடிகிறது.