‘ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது’ என ரஜினி கூறியதாகப் பரவும் தவறான செய்தி !
பரவிய செய்தி
நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று குஜராத் ஜாம்நகரில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி – நியூஸ் 18 தமிழ்நாடு
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Pre Wedding) மார்ச் 1 முதல் 3 -ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க், பாப் பாடகி ரிஹானா, அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் உட்பட பல்வேறு துறை பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று கூறியதாக குறிப்பிட்டு ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
— Blue Sattai Maran (@tamiltalkies) March 4, 2024
பேங்க்ல கடன் வாங்கி அதை வாரா கடன் என தள்ளுபடி செய்ய வைத்து அந்த பணத்தில் ஆடம்பர திருமணம் செய்வது எப்படி நாட்டுக்கு பெருமையாகும்..?
இந்த பைத்தியத்துக்கு யாராவது அரசியல் சொல்லிக் கொடுங்கப்பா…! pic.twitter.com/XBq83DcVWp
— ✒️Writer SJB✒️ (@SJB56856832) March 4, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று நடிகர் ரஜினி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதை அறிய முடிகிறது.
நியூஸ் 18 தமிழ்நாடு இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், “அம்பானிகள், நம் இந்தியாவின் பெருமை. முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானி, திருமணத்திற்கு முந்தைய நிகழ்வை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த கைலாசத்தையும், வைகுண்டத்தையும் இந்த உலகிற்கு கொண்டு வந்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் வந்தாரா வனம் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிரூபர் ஒருவர் ரஜினியிடம் கேட்டதற்கு, “மிக அருமை. இது உண்மையில் இந்தியாவிற்கு பெருமையாக/கௌரவமாக இருக்கப் போகிறது. நமது வேத பாரம்பரியம், நமது கலாச்சாரம் மற்றும் நம் நாடு மற்றும் மக்கள் மீதான அன்பின் காரணமாகவே இன்று அம்பானி இவ்வாறு இருக்கிறார். மேலும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.
#JUSTIN நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் – குஜராத் ஜாம்நகரில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி #Rajinikanth #Gujarat #Jamnagar #AmbaniPreWedding #AnantRadhikaWedding #AmbaniFamilyWedding #NitaAmbani #Ambani… pic.twitter.com/AQsPgHlgwL
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 4, 2024
இதே போன்று ANI ரஜினி பேசியது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவையும் ஆய்வு செய்து பார்த்தோம். அதிலும் “நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று ரஜினி எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்த முடிந்தது.
#WATCH | Jamnagar, Gujarat: On Anant Ambani and Radhika Merchant’s pre-wedding celebrations, actor Rajnikanth says, “The way Nita and Mukesh Ambani conducted the pre-wedding functions is mesmerizing. They brought down the Kailasha and ‘Baikuntha’ to this world… I wish a very… pic.twitter.com/4oBrM42dym
— ANI (@ANI) March 4, 2024
எனவே வந்தாரா வனம் உண்மையில் இந்தியாவிற்கு பெருமையாக/கௌரவமாக இருக்கப் போகிறது என்று ரஜினி கூறியதை, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று ரஜினி கூறியதாகக் கூறி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமிக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !
மேலும் படிக்க: அசைவ உணவு சாப்பிடுபவர் ஒழுக்கம் இல்லாதவர் என ரஜினிகாந்த் பேசினாரா ?
முடிவு:
நம் தேடலில், “நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று ரஜினி கூறியதாகக் கூறி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது.