This article is from Jul 14, 2019

குடியரசுத்தலைவர் கோவிலுக்குள் செல்ல அர்ச்சகர்கள் அனுமதிக்க மறுத்தனரா ?

பரவிய செய்தி

மேலும், ஒரு அதிர்ச்சியான தகவல். கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத்தலைவரும், அவரது மனைவியும் பார்ப்பன அர்ச்சகர்களால் தள்ளிவிடப்பட்டனர்.

மதிப்பீடு

விளக்கம்

கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஜகன்நாதர் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதாவும் சென்றனர். இந்திய குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு முதன் முறையாக பூரி கோவிலுக்கு சென்றார். கோவில் கருவறை அருகே ராம்நாத் கோவிந்தும், சவிதாவும் சென்ற போது அங்கிருந்த பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் கோவிலுக்குள் நுழைய விடாமல் தள்ளி விட்டப்பட்டனர். கோவில் பாதுகாவலர்கள் முரட்டுத்தனமான நடவடிக்கைக் குறித்து பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வாலுக்கு குடியரசுத்தலைவர் மாளிகை புகார் கடிதம் எழுதி உள்ளார்கள் என (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) செய்தித்தாளில் இப்படியான தகவல் வெளியாகிய படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

குடியரசுத்தலைவரும், அவரின் மனைவியும் ஜகன்நாதர் கோவிலில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டனரா என்பதை அறிய, அது தொடர்பான தேடலைத் துவங்கினோம். ஜூன் 26-ம் தேதி 2018-ல் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளத்தில் குடியரசுத்தலைவர் மற்றும் அவரின் மனைவியிடம் கோவில் பணியாளர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் சந்திப்பு நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

குடியரசுத்தலைவர் தன் மனைவி உடன் ஜகன்நாதர் கோவிலுக்கு சென்ற பொழுது கோவிலுக்குள் நுழைய மறுக்கப்பட்டார், சாதி காரணமாக கருவறை இருக்கும் சன்னதியில் தம்பதியினர் நுழைய மறுக்கப்பட்டனர், கோவிலில் இருந்த பாதுகாலவர்கள் குடியரசுத்தலைவரிடம் தவறாக நடந்து கொண்டனர், ஜகன்நாத் கோவிலின் சன்னதியில் முதல் பெண் தரிசிக்க வந்த பொழுது பணியாளர்கள், குடியரசுத்தலைவருடன் நெருக்கடி ஏற்பட்டது என பல குற்றச்சாட்டுகள் வெவ்வேறு விதமாக செய்திகளில், இணையதளத்தில் வெளியாகி இருந்தது.

இதனை கண்டித்து ராஷ்டிரபதி பவன் பூரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியதாகவும், இதையடுத்து கோவில் நிர்வாகத்திடம் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் ஒரு கடிதமும் அச்சமயத்தில் ஒடிசா மொழியில் வைரலாகி இருந்தது.

உண்மை என்ன ?

ஆனால், சமூக வலைதளங்களில் கூறுவது போன்று, ராஷ்டிரபதி பவனில் இருந்து பூரி மாவட்ட ஆட்சியருக்கு எந்தவொரு கடிதமும் அனுப்பப்படவில்லை என்பதே உண்மை. இது தொடர்பாக குடியரசுத்தலைவரின் செய்தி பிரிவின் செயலாளர் அசோக் மாலிக் இந்தியா டுடேவிற்கு அளித்த தகவலில், ” குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து அப்படியான கடிதம் ஏதும் அனுப்பவில்லை மற்றும் அது தொடர்பாக வெளியாகும் தகவல் அனைத்தும் வெறும் யூகங்கள் மட்டுமே. எனினும், சில பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் குடியரசுத்தலைவர் அருகே வர முயன்றனர். ஆனால், அவர்கள் தடுக்கப்பட்டனர் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக ஜகன்நாதர் கோவிலின் மூத்த அர்ச்சகரான இப்ஷிட் ப்ரதிஹரி கூறுகையில், குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து புகார் கடிதம் வந்ததாக கூறும் செய்தி தவறானது எனத் தெரிவித்து இருந்தார். இந்த செய்திகள் 2018 ஜூன் 30-ம் தேதி இந்தியா டுடே தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ராஜஸ்தான் கோவிலில் :

 இதற்கு முன்பாக, ” ராஜஸ்தானில் மாநிலத்தில் புஷ்கர் பகுதியில் உள்ள பிரம்மன் கோவிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படாததால் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து பூஜை செய்துள்ளார்கள் ” என வதந்திகள் பரவி இருந்தன.

விரிவாக படிக்க : குடியரசுத்தலைவருக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பா ?

ராமேஸ்வரம் கோவிலில் : 

இதே போன்று சமீபத்தில், காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை குடியரசுத்தலைவர் சந்திக்க இருப்பதாக நியூஸ் 7 செய்தியில் வெளியான செய்தியை வைத்து குடியரசுத்தலைவர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பொழுது அனுமதி மறுக்கப்பட்டதாக மீம் பதிவிட்டு உள்ளனர்.

ஆனால், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 2017 டிசம்பர் 23-ம் தேதி ராமேஸ்வரம் கோவிலில் சென்ற பொழுது தகுந்த மரியாதை அளித்து, தரிசனம் செய்த புகைப்படங்கள் இணைந்த வீடியோ President of India என்ற youtube சேனலில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை கோவிலில் அனுமதிக்கவில்லை, தகுந்த மரியாதை அளிக்கவில்லை என்பது தொடர்பாக ராஷ்டிரபதி பவனில் இருந்து எந்தவொரு கடிதமும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படவில்லை. அர்ச்சகர்களும், குடியரசுத்தலைவரின் செய்திப் பிரிவு செயலாளரும் வெளியான செய்தியை மறுத்து உள்ளனர். ராம்நாத் கோவிந்த் ஜகன்நாதர் கோவிலுக்கு சென்ற வீடியோக்கள் செய்திகளில் வெளியாகியதை பார்த்தால் அறியலாம்

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader