ரெங்கராஜன் நரசிம்மனை திமுகவினர் தாக்கியதாக வலதுசாரிகளால் பரப்பப்படும் தெலுங்கானா வீடியோ !
பரவிய செய்தி
தி.மு.க அரசு, இந்துக் கோவில்களில் முறைகேடு செய்ததாக, வழக்கு தொடர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள், திருச்சி நீதிமன்ற வளாகத்தில், இன்று தி.மு.க ரவுடிகளால் தாக்கப்பட்டார்.
மதிப்பீடு
விளக்கம்
ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் இந்து கோயில்களில் திமுக அரசு முறைகேடு செய்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தார். அவரை திருச்சி நீதிமன்றத்தில் வளாகத்தில் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டார் என 30 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப் குழுக்களிலும் வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வருகிறது.
தி.மு.க. அரசு, இந்துக் கோவில்களில் முறைகேடு செய்ததாக, வழக்கு தொடர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள், திருச்சி நீதிமன்ற வளாகத்தில், தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டார் pic.twitter.com/F3wrEhwLSS
— நாளை இந்தியாவின் எதிர்காலம் அண்ணாமலைஅவர்கள் கையில் (@orbLxTlUqLRlZJh) January 3, 2023
மேலும், அப்பதிவுகளில் இந்துக்கள் முதுகெலும்பில்லாதவர்கள், வெட்கமற்றவர்கள், உணர்ச்சியற்றவர்கள் என்றும், இந்த வீடியோவை அதிகபட்சமாகப் பகிரவும் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
ரெங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டதாகப் பரவக் கூடிய வீடியோவின் 5வது வினாடியில் பைக் ஒன்றில் AP (Andhra Pradesh) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதேபோலக் காவலரின் சீருடையை வைத்துப் பார்க்கும் போதும் அது தமிழ்நாடு இல்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும், அந்த வீடியோவில் ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடினோம். ‘Sakshi Tv’ என்ற தெலுங்கு செய்தி யூடியூப் பக்கத்தில், “Ayyappa Devotees Attack on Bairi Naresh | Bairi Naresh Comments on Hindu Gods | Sakshi Tv” என்ற தலைப்பில் 2022, டிசம்பர் 30ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஐயப்ப பக்தர்கள் பைரி நரேஷ் என்பவரை தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். ‘தெலுங்கு சமயம்’ என்ற இணையதளம் கடந்த டிசம்பர் 30ம் தேதி இது தொடர்பாகச் செய்தி வெளியிட்டுள்ளது. தெலுங்கிலிருந்த அச்செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்தோம்.
அதில் கூறியுள்ள செய்தி, பைரி நரேஷ் என்பவர் ஐயப்பன் மற்றும் இந்து கடவுளைத் தவறாகப் பேசியதைக் கண்டித்து ஐயப்பன் பக்தர்கள் தெலுங்கானாவில் கோஸ்கி (Kosgi) என்ற பகுதியில் போராட்டம் செய்தனர். அப்போது அங்கு வந்த பைரி நரேஷை ஐயப்ப பக்தர்கள் தாக்கினர். இதிலிருந்து இந்த சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.
ரெங்கராஜ் நரசிம்மன் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஸ்ரீரங்கம் கோயில் வரவு செலவு கணக்கைத் தணிக்கை செய்ய வேண்டும் என 2018ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அக்கோயில் கணக்குகள் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என அப்பொதுநல வழக்கைச் சென்னை உயர்நீதி மன்றம் கடந்த டிசம்பர் 30ம் தேதி தள்ளுபடி செய்துள்ளது குறித்து ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
I am safe. A fake video is circulating on the social media that I was attacked by DMK men. This is a false news. In April 2022, I was attacked by 2 advocates in Trichy Combined Courts, and that news, with an unrelated video of a brawl is doing rounds. https://t.co/9A6Oza5xD7
— Rangarajan Narasimhan (@OurTemples) January 3, 2023
மேலும், பரவக்கூடிய வீடியோ குறித்து ரெங்கராஜன் நரசிம்மன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் பாதுகாப்பாக இருபதாகவும், தன்னை திமுகவினர் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ போலியானது என்றும் பதிவிட்டுள்ளார். அது மட்டுமின்றி, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 2022, ஏப்ரல் மாதம் 2 வழக்கறிஞர்களால் தான் தாக்கப்பட்டதும், ஆனால், பரவக்கூடிய வீடியோவிற்கும் அந்த நிகழ்விற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Right now i am being attacjed by goon advocates at Trichy combined courts. I am in the chief court seeking asylum. pic.twitter.com/bItsce1r4R
— Rangarajan Narasimhan (@OurTemples) April 25, 2022
முடிவு :
நம் தேடலில், ரெங்கராஜன் நரசிம்மனை திமுகவினர் திருச்சி நீதிமன்றத்தில் தாக்கியதாக வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பக்கூடிய வீடியோ உண்மை அல்ல. மேலும், அவ்வீடியோவில் உள்ள சம்பவம் தெலுங்கானா கோஸ்கி பகுதியில் நடந்த வேறொரு நிகழ்வு என்பதை அறிய முடிகிறது.