திமுக அரசு ரேஷன் பொருள் பெற தகுதியை வெளியிட்டதாக பரவும் பழைய செய்தி !
பரவிய செய்தி
ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை – தமிழக அரசு.
மதிப்பீடு
விளக்கம்
3 அறைகளுக்கு மேல் உள்ள கான்கிரீட் வீடு, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால், 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என வரிசையாக நியூஸ் 18 தமிழ் சேனலில் வெளியான செய்தி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
தற்போதைய திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ரேஷன் பொருட்கள் பெற தகுதியானவர்கள் யார் என இப்பட்டியலை வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் 18 சேனலில் வெளியான செய்தியின் புகைப்படங்கள் தற்போது வெளியானவை அல்ல, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெளியான செய்தி.
” தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017 ” என்பதை தமிழக அரசு வகுத்தது. அதன்படி, யாருக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும், ரேஷன் பொருட்கள் பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் இல்லை ” என வெளியான செய்தி 2017-ல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
2017 ஜூலை 31-ம் தேதி வெளியான செய்தியால் பரபரப்பு உருவாகிய நிலையில் அடுத்த நாள் அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வதந்திகளை நம்ப வேண்டாம் என பேட்டி அளித்து இருக்கிறார்.
” ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி இருந்தோம். அதன்படி, தமிழக அரசுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான சட்ட விதிகளை அரசிதழில் வெளியிடுவது என்பது ஒரு நடைமுறை தான். எனவே, வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் மாற்றம் இல்லை ” என 2017 ஆகஸ்ட் 1-ம் தேதி தினத்தந்தி செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ரேஷன் பொருட்கள் பெற தகுதியானவர்கள் யார் என்பதை திமுக அரசு வெளியிட்டதாக பரப்பப்படும் செய்தியின் புகைப்படங்கள் 2017-ல் அதிமுக ஆட்சியில் வெளியானது. அப்போதே, அதிமுக அமைச்சர் காமராஜ் வெளியான செய்தியை மறுத்து, ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் மாற்றம் இல்லை எனக் கூறியதையும் அறிய முடிகிறது.