மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டது குறித்து தவறான செய்திகளைப் பரப்பும் பாஜகவினர்!

பரவிய செய்தி

தேர்தல் முடிந்தது.!! மதுரவாயலில் அம்மன் கோவில் இடிக்கப்பட்டது.!!

X Link:

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் முடிந்த உடனேயே மதுரவாயலில் உள்ள கோயிலை தமிழ்நாடு அரசு இடித்துவிட்டது என்று கூறி 24 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் அந்த வீடியோவில், இடிக்கப்பட்ட கோயிலின் சிலையை சுற்றி பல பெண்கள் அமர்ந்து அழுவதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதன் முழு வீடியோ “News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7” என்ற எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 23 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

அந்த வீடியோவின் மூலம், 2019 இல் சாந்தி முனிரத்தினம் என்பவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை அருகே மதுரவாயலில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட நாகாத்தம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளது என்பதையும், மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அரசு நிலமான 4 அடியை ஆக்கிரமித்திருந்த சாந்திமுனி ரத்தினத்தின் (வழக்கு தொடர்ந்தவர்) இடமும் அகற்றப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.

எனவே இது குறித்து மேலும் தேடியதில், இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏப்ரல் 20 அன்று வெளியிட்டுள்ள உத்தரவு நமக்கு கிடைத்தது. அதில், “பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 11 பகுதி 22 கோட்டம் 144ல் சன்னதி தெருவின் வடக்கு பக்கம் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு சம்மந்தமாக மதிப்பிற்குரிய உயர்ந்தி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பார்வையில் கண்டுள்ளபடி உத்தரவு பெறப்பட்டுள்ளது. உத்தரவின்படி தங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் கோயில், ஆக்கிரமிப்பில் உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே மதிப்பிற்குரிய உயர்நீதி மன்றத்தின் உத்தரவினை செயல்படுத்தும் வகையில் 22.04.2024 அன்று பகல் 9.00 மணியளவில் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பாக தினகரன் ஊடகமும், தனது பக்கத்தில் ஏப்ரல் 23 அன்று “மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மதுரவாயலில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு அருகே வசிக்கும் சாந்தி முனிரத்தினம் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலே, ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: எம்பி டி.ஆர்.பாலு கோவில், மசூதி இடிப்பு பற்றி பேசிய வீடியோவை எடிட் செய்து திரித்து பரப்பும் அண்ணாமலை !

முடிவு:

நம் தேடலில், சமூக ஊடகங்களில் மதுரவாயல் கோயிலை இடித்த தமிழ்நாடு அரசு என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader