மோடி அரசு இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய திட்டமா ?
பரவிய செய்தி
ரத்தாகிறது அனைத்து சாதி சலுகை. திறமைக்கே முன்னுரிமை – மோடி ஜி.
மதிப்பீடு
விளக்கம்
இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான கருத்துக்களை ஒருசாரார் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை அதிகம் காணலாம். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்னிறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு சலுகையை ரத்து செய்து விட்டு, திறமைக்கே முன்னுரிமை அளிக்க உள்ளதாக முகநூலில் ஒருவர் பதிவிட்டதை காண நேரிட்டது.
மணிகண்டன் என்பவர் வைர தாமரை என்ற முகநூல் குழுவில் செப்டம்பர் 14-ம் தேதி பதிவிட்ட இட ஒதுக்கீடு குறித்த பதிவை 3.7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து உள்ளனர். இந்த பதிவில் கூறுவது போன்று மத்திய அரசு அவ்வாறான முடிவில் இருக்கிறதா என்பது குறித்து அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
2018-ல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையை நீக்க உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி அளித்த பதில் ஆனது ” Reservation is here to stay, let there be no doubts on this: PM Modi ” என்ற தலைப்பில் இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
” இந்தியாவில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறையை நீக்கும் திட்டமானது அரசிடம் இல்லை. நமது அரசியலமைப்பின் நோக்கங்கள் மற்றும் அம்பேத்கர் உடைய கனவு இன்றுவரை முழுமை பெறவில்லை என்பதால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறையை நீக்க முடியாது. இங்கு இட ஒதுக்கீடு இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை ” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
” பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றுவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதை அடைய இட ஒதுக்கீடு ஒரு முக்கிய கருவியாகும் ” என்று மோடி கூறியிருந்தார்.
முடிவு :
மோடி தலைமையிலான அரசு இட ஒதுக்கீடு முறையை நீக்க உள்ளதாக பரவி வரும் செய்தி வதந்தியே. இத்தகைய குற்றச்சாட்டு கடந்த ஆண்டே எழுப்பப்பட்ட பொழுது, அப்படியொரு திட்டமே இல்லை என மோடி தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், அவருடைய ஆதரவாளர்களே இங்கு வதந்திகளை பரப்பி வருகின்றனர். முகநூலில் வெளியாகும் பதிவுகளை கண்மூடித்தனமாக நம்புவதை விடுத்து குறைந்தபட்சம் அதனை பற்றி படித்து தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.