பிரதமர் வீட்டு படிக்கட்டில் பூஜை, பகவத் கீதை மீது பதவி பிரமாணம் என ரிஷி சுனக்கை விடாத பாஜகவினரின் பொய்கள்
பரவிய செய்தி
பிரதமருக்கான வீட்டுக்குள் நுழையும் முன், படிக்கட்டுக்கு மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து வணங்கி பின் உள்ளே சென்றார். மேலும் பகவத் கீதை மீது கைவைத்து, இங்கிலாந்து பிரதமராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டார் ரிஷி சுனாக்.*
மதிப்பீடு
விளக்கம்
பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் பிரதமருக்கான வீட்டுக்குள் நுழையும் முன், படிக்கட்டுக்கு மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து வணங்கி பின் உள்ளே சென்றதாகவும், பகவத் கீதை மீது கைவைத்து பிரதமராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டதாகவும் இப்புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் வைரல் செய்து வருகின்றனர்.
மேலும், ரிஷி சுனக் தனது அலுவலகத்தில் நுழைவதற்கு முன்பாக விளக்கேற்றி வழிபட்டதாக வைரல் புகைப்படத்தில் ரிஷி சுனக் அமர்ந்து இருக்கும் அதே காட்சி வீடியோவாகவும் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு ஆதரவு பதிவுகள் இந்தியாவில் இருந்து வெளியானது போல் பல்வேறு தவறான, பழைய படங்கள், வீடியோக்கள் மற்றும் வதந்திகளும் பரப்பப்பட்டன.
இந்து மதத்தைப் பின்பற்றும் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது பிரதமர் வீட்டு வாசலில், பிரதமர் அலுவலக வாசலில் பூஜை செய்ததாக பரப்பப்படும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” அது 2020 தீபாவளி தின கொண்டாடத்தின் போது எடுக்கப்பட்டது ” என தெரிய வந்தது.
I’ve placed our rangoli outside No.11, the mithai are set to be delivered and the family Zoom is booked in.
I know things will feel a bit different, and it’s hard not to be able to see family, but we will get through this together.
Happy Diwali everyone! pic.twitter.com/4lDI8bH1HJ
— Rishi Sunak (@RishiSunak) November 14, 2020
2020ம் ஆண்டு பிரிட்டனின் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே விளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து தெரிவித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் ரிஷி சுனக் பதிவிட்டு இருக்கிறார்.
பகவத் கீதை :
பிரிட்டன் நாட்டின் பிரதமரை அரச அதிகாரத்தில் இருப்பவர்களே நியமிக்கும் வழக்கம் உண்டு. சமீபத்தில் ராணி எலிசபெத் மறைந்ததையடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக பதவியேற்றார். இதையடுத்து, பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக்கை முறைப்படி மன்னர் சார்ல்ஸ் அவர்களால் நியமிக்கப்பட்டதாக செய்திகளில் வெளியாகியது.
2017ல் ரிஷி சுனக் எம்பியான போது பகவத் கீதை மீது கை வைத்து பதவிப் பிரமாணம் எடுத்ததாக அவுட்லுக்இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது. பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பகவத் கீதை மீது கை வைத்து பதவிப் பிரமாணம் மேற்கொண்டதாக எந்த தகவலும் இல்லை.
முடிவு :
நம் தேடலில், பிரதமருக்கான வீட்டுக்குள் நுழையும் முன் படிக்கட்டுக்கு மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து வணங்கி பின் உள்ளே சென்றதாகவும், பகவத் கீதை மீது கை வைத்து பிரதமராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டார் ரிஷி சுனாக் எனப் பாஜக மற்றும் வலதுசாரிகளால் பரப்பப்படும் தகவல் மற்றும் புகைப்படம் தவறானது என அறிய முடிகிறது.