ரொனால்டோ நட்சத்திர விடுதியை மருத்துவமனையாக மாற்றினாரா ?
பரவிய செய்தி
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனது நட்சத்திர ஹோட்டலை வழங்கிய கிரிஸ்டியானோ ரொனால்டோ.. கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிற்சையளிக்க தனது நட்சத்திர ஹோட்டலை வழங்கியது மட்டுமல்லாமல் மருத்துவர்கள் மற்றும் தாதிகளின் சம்பளம் மற்றும் அனைத்து மருத்துவ செலவையும் ரொனால்டோ பொறுப்பேற்றுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நட்சத்திர விடுதிகளை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனையாக மாற்றி உள்ளதாக செய்தியொன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோக்கு மதீரா எனும் தீவில் நான்கு நட்சத்திர விடுதிகள் உள்ளன. போர்ச்சுகீசிய தலைநகரான லிஸ்பானில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒரு நாள் இரவுக்கு 240 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்தகைய நட்சத்திர விடுதியையே ரொனால்டோ தற்காலிக மருத்துவமனையாக மாற்றி உள்ளதாக மார்கா எனும் செய்தி ஊடகம் வெளியிட்டது.
இதையடுத்து, பல நாடுகளில் உள்ள (இந்தியா உள்பட) முன்னணி செய்தி ஊடகங்கள் கூட செய்திகளை வெளியிடத் தொடங்கின. ஆனால், நட்சத்திர விடுதியை தற்காலிக மருத்துவமனையாக மாற்றியதாக வெளியான செய்தியை விடுதி ஊழியர்களே மறுத்து உள்ளனர்.
மதீரா தீவில் உள்ள விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், ” நாங்கள் விடுதியில் இருக்கிறோம். நாங்கள் மருத்துவமனையில் இருக்கப் போவதில்லை. இது அனைவருக்கும போல் ஒரு நாள், நாங்கள் விடுதியிலேயே இருப்போம். எங்களுக்கு பத்திரிகைகள் போன் செய்கிறார்கள் ” எனத் தெரிவித்து உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும், லிஸ்பானில் உள்ள ரொனால்டோ விடுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க விடுதியை தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பாக எந்தவொரு திட்டம் குறித்தும் அறிந்திருக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
ரொனால்டோ குறித்து செய்தி வெளியிட்ட மார்கா நிறுவனம் செய்தியை பின்னர் நீக்கி உள்ளது. பல பத்திரிகையாளர்கள் ரொனால்டோ குறித்த செய்தியை குறிப்பிட்டு தவறான தகவல்கள் பரவுவதாக தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
For information: https://t.co/rbDpMTcs6s pic.twitter.com/jWzDZX0GJK
— Cristiano Ronaldo (@Cristiano) March 13, 2020
மார்ச் 13-ம் தேதி ரொனால்டோ தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ட்வீட் செய்து உள்ளார். எனினும், தனது ட்வீட் பதிவில் விடுதியை மாற்றுவது குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
மேலும் படிக்க : அமேசானின் காட்டுத் தீயை அணைக்க ரொனால்டோ 3 விமானத்தை அனுப்பினாரா ?
கடந்த வருடம் அமேசான் காட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க கால்பந்து வீரர் ரொனால்டோ 3 விமானங்களை அனுப்பியதாக வதந்திகள் பரவி இருந்தன. இதற்கு முன்பாகவும், ரொனால்டோவை மையப்படுத்தி பல வதந்திகள் உலக அளவில் வைரல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.