முஸ்லீம் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தவரை ஆர்.எஸ்.எஸ் தாக்கினார்களா ?
பரவிய செய்தி
முஸ்லீம் குடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணின் முகத்தை சிதைத்த ஆர்.எஸ்.எஸ் காவி வெறியர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
சில நாட்களுக்கு முன்பாக, ” ஊரடங்கால் வீட்டிற்கு செல்ல முடியாமல் உடன் படித்த இந்து தோழியின் வீட்டில் தங்கிய இஸ்லாமிய சகோதரி. விசயம் அதோடுமுடியவில்லை. நோன்புகாலம் தொடங்கியவுடன் தான் நோன்பு திறக்க முடியமால் போய்விடுமோ என்று வருத்தப்பட அதிகாலை எழுந்து உணவு சமைத்து பரிமாறிய இந்து தாய்.. நெகிழச் செய்த நேசம் மதம் கடந்த மனிதம் ” என இவ்இருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் டெல்லியில் நிகழ்ந்ததாக அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், முஸ்லீம் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தை ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர்கள் தாக்கியதாக ஓர் வயதான பெண் இரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு தற்போது வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஊரடங்கில் டெல்லியில் முஸ்லீம் பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்ததோடு, நோன்பு திறக்க அதிகாலையில் உணவு பரிமாறியதாக வைரல் செய்யப்பட்ட புகைப்படம் எடுக்கப்பட்டது ஏப்ரல் 25-ம் தேதி 3.41 மணி என அதில் இடம்பெற்று இருக்கிறது. அதற்கு முன்பாகதான் ரம்ஜான் நோன்பு இருக்கும் நாட்கள் தொடங்கின. இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு உள்ளது. எனினும், அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.
அடுத்ததாக, இந்து குடும்பத்தினர் தாக்கப்பட்டதாக இணைக்கப்பட்ட புகைப்படம் குறித்து தேடுகையில், அப்புகைப்படம் சமீபத்தியவை அல்ல என அறிய முடிந்தது.
2020 பிப்ரவரி 23-ம் தேதி மனிஷ் பாண்டே எனும் ட்விட்டர் பக்கத்தில் குஜராத்தின் காம்பத் பகுதியில் நிகழ்ந்த வன்முறை கலவரத்தினை குறிப்பிட்டு சில புகைப்படங்கள் பகிரபட்டுள்ளது. அதில், தற்போது வைரல் செய்யப்படும் பெண்மணியின் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
2020 பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலத்தின் காம்பத் பகுதியில் இந்து-முஸ்லீம் மதத்தினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் 30-க்கும் மேற்பட்ட வீடுகள், பல்வேறு கடைகள் மற்றும் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அங்கு நிகழ்ந்த வன்முறையைக் குறிப்பிட்டு சில ட்விட்டர் பக்கங்களில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் என தற்போது வைரல் செய்யப்படும் பெண்மணியின் புகைப்படமும் பதிவாகி இருக்கிறது. எனினும், அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்பது குறித்த விவரங்கள் இல்லை. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
நமது தேடலில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் தாக்கப்பட்ட இந்து குடும்பத்தினர் என பரப்பப்படும் புகைப்படம் 2 மாதங்களுக்கு முன்பே ட்விட்டர் உள்ளிட்டவையில் வைரலாகி இருக்கிறது. ஆகையால், தவறான புகைப்படத்துடன் தவறான செய்தியை பகிர்ந்து வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.