ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் குழந்தை தாக்கப்பட்டதாகப் பரவும் சமஸ்கிருத பள்ளி வீடியோ !
பரவிய செய்தி
RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படும் கொடூர காட்சி
மதிப்பீடு
விளக்கம்
ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க பயிற்சி முகாமில் மாணவர் ஒருவர் அடித்து சித்ரவதை செய்யப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளம் மற்றும் வாட்ஸ் ஆப்-ல் பரப்பப்பட்டு வருகிறது.
சுமார் 2 நிமிடம் உள்ள அந்த வீடியோவில் காவி வேட்டி அணிந்த சிறுவர்கள் நின்று கொண்டு இருக்கின்றனர். அதில் ஒரு சிறுவனை ஒருவர் கன்னத்தில் அறைந்து பின்னர் கொம்பு வைத்து கடுமையாகத் தாக்குகிறார்.
உண்மை என்ன ?
அந்த வீடியோவின் கீப்ரெம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், அது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சமஸ்கிருத பள்ளியில் நடந்த கொடூரம் என்பதை அறிய முடிந்தது.
‘Bhaskar’ எனும் இணையதளத்தில் இந்த வீடியோ குறித்து வெளியான செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் (Sitapur) சமஸ்கிருத பள்ளி ஆசிரியர் சதீஷ் ஜோஷி என்பவர் மாணவரைக் கடுமையாகத் தாக்கினார் என்றுள்ளது. அம்மாணவர் பள்ளியை விட்டு ஓடிவிட்டதாகவும் பிறகு அவர் கண்டுபிடிக்கப்பட்டதும் கோபத்தில் அடித்ததாகவும் ஆசிரியர் கூறியுள்ளார்.
மாணவரைச் சமஸ்கிருத ஆசிரியர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதையடுத்து சீதாபூர் காவல் துறையினர் அவர்மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளனர்.
இந்த வீடியோவின் 30 வினாடிகளை ‘சீதாபூர் லைவ் நியூஸ்’ என்னும் டிவிட்டர் பக்கம் கடந்த 8ம் தேதி (அக்டோபர்) பதிவிட்டுள்ளது. அதிலும் சமஸ்கிருத பள்ளி ஆசிரியர் மாணவனைக் கடுமையாகத் தாக்கினார் என்றுதான் உள்ளது.
सीतापुर: शिक्षक ने छात्र को छड़ी से बुरी तरह से पीटा, शिक्षक ने गुरुकुल में पढ़ने वाले छात्र को पीटा, सतीश जोशी ने किसी बात को लेकर छात्र को पीटा, छात्र की पिटाई का वीडियो हो रहा है वायरल, संस्कृति पीठ विद्या मंदिर बोधेपुर का है वीडियो। pic.twitter.com/6RAi0ORr5W
— SITAPUR LIVE NEWS (@sitapurlivenews) October 8, 2023
இது தொடர்பாக சீதாபூர் காவல் துறையும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து வீடியோ பதிவிட்டுள்ளது. அதிலும் சமஸ்கிருத பள்ளியில் 2 மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
थाना सिधौली क्षेत्रांतर्गत शिक्षक/आचार्य द्वारा छात्र की पिटाई के प्रकरण में दि.08.10.23 को सुसंगत धाराओ में अभियोग पंजीकृत है,आरोपी को हिरासत में लेकर नियमानुसार विधिक कार्यवाही की जा रही है।इस संबंध में सीओ सदर श्री राजू कुमार साव द्वारा दी गयी बाइट-@Uppolice @CMOfficeUP pic.twitter.com/Lg9TdNT1mV
— Sitapur Police (@sitapurpolice) October 9, 2023
மேற்கண்ட எந்த ஒரு செய்தியிலும் காவல் துறை விளக்கத்திலும் இந்த சம்பவம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் நடைபெற்றது எனக் குறிப்பிடவில்லை. கிடைத்த ஆதாரங்களிலிருந்து இது சமஸ்கிருத பள்ளியில் நடந்தது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உத்தரப்பிரதேசம் சீதாபூர் உள்ள சமஸ்கிருத பள்ளியில் நடைபெற்றது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.