மக்கள் நடமாட்டத்தை தடுக்க ரஷ்யா 500 சிங்கங்களை திறந்து விட்டதாக வதந்தி!
பரவிய செய்தி
உலகளாவிய தொற்று பரவி வரும் வேளையில் மக்கள் வீடுகளிலேயே இருக்க ரஷ்யா 500-மேற்பட்ட சிங்கங்களை வீதிகளில் திறந்து விட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வீடுகளிலேயே இருக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதை தடுக்க அந்நாட்டின் அதிபர் புதின் 500- சிங்கங்களை வீதிகளில் திறந்து விட்டுள்ளதாக சாலையின் நடுவே இருக்கும் சிங்கத்தின் புகைப்படம் அடங்கிய நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.
வைரலாகும் நியூஸ் கார்டில் எந்தவொரு செய்தி நிறுவனத்தின் பெயரும் இடம்பெறவில்லை. செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தேடுகையில், சர்வதேச செய்தி தளங்களில் எந்தவொரு செய்தியும் வெளியாகியதாக தகவல்கள் இல்லை.
ஆகையால், வைரலாகிக் கொண்டிருக்கும் சிங்கத்தின் புகைப்படம் அடங்கிய நியூஸ் கார்டு புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அந்த சிங்கத்தின் புகைப்படம் தொடர்பான 2016-ம் ஆண்டில் வெளியான செய்திகள் கிடைத்துள்ளன.
2016 ஏப்ரல் 15-ம் தேதி டெயிலிமெயில் இணையதளத்தில், ” தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னேஸ்பேர்க்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் பெரிய ஆண் சிங்கம் நடு இரவில் சுற்றித் திரிந்து உள்ளது. கொலம்பஸ் என அழைக்கப்படும் சிங்கம் வழிமாறி நகரத்திற்குள் வரவில்லை. உள்ளூர் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று திரைப்பட காட்சிக்காக லயன்ஸ் பார்க்கில் இருந்து கொலம்பஸ் சிங்கத்தை கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஷூட்டிங் நடைபெறுவது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறி விட்டனர் ” என வெளியாகி இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரில் சுற்றித் திரிந்த சிங்கம் அங்கிருந்த காரின் மீது ஏறும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. 2016-ல் தென் ஆப்பிரிக்காவில் வீதிகளில் சுற்றித் திரிந்த ஒற்றைச் சிங்கத்தின் புகைப்படத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வெளியே வருவதை தடுக்க 500 சிங்கங்களை ரஷ்ய அதிபர் திறந்து விட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.