ஹஜ் யாத்திரை சென்ற வங்கதேசத்தினர் படத்தை சபரிமலை பக்தர்களுடன் தொடர்புப்படுத்திப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு.

X link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கேரளா சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக பன்மடங்கு அதிகரித்து உள்ளது. பக்தர்களின் அதீத எண்ணிக்கையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டும், வாகனங்கள் செல்வது தாமதமாகி பக்தர்கள் காத்திருப்பது உள்ளிட்டவை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி வசதியாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால், சபரிமலைக்குச் செல்கின்ற ஐயப்ப பக்தர்கள் பேருந்தில் நெரிசலாக அடைத்து வைத்தது போல் அழைத்துச் செல்லப்படுகின்றனர் எனப் பொருள்கொள்ளும்படி புகைப்படம் ஒன்றினை இந்து மக்கள் கட்சி டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. இதனை வலதுசாரிகள் பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். 

X link 

உண்மை என்ன ? 

சபரிமலை மற்றும் ஹஜ் யாத்திரை தொடர்பாகப் பரவும் படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அப்படம் 2018ம் ஆண்டு சவுதி அரேபியா மதீனாவில் இருந்து வங்கதேசம் டாக்கா-விற்கு புறப்பட்ட விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. 

‘Daily sun’ என்னும் இணையதளத்தில் 2018, ஆகஸ்ட் 25ம் தேதி வெளியான செய்தியில், ஹஜ் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் மதீனாவில் இருந்து டாக்கா புறப்பட்டது. இந்த ஆண்டு (2018) 371 ஹஜ் விமானங்கள் மூலம் 1,27,298 பேர் ஹஜ் யாத்திரை சென்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் பரவக் கூடிய புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதேபோல் 2013ம் ஆண்டு டாக்காவில் இருந்து ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட பிமன் (Biman) பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் எடுக்கப்பட்ட படம் ‘Alamy’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பரவக் கூடிய படத்தில் இருப்பது போன்ற இருக்கைகளை அதிலும் உள்ளது. இதிலிருந்து பரவக் கூடிய படம் பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருக்கையில் தலைக்கு அருகே வைக்கக் கூடிய காகிதத்தில் உள்ள இலச்சினையும் பரவக் கூடிய படத்தில் இருப்பதும் ஒன்றாக உள்ளது. இவற்றிலிருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களின் படம் வங்கதேச விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

எனவே, சபரிமலைக்குப் பேருந்தில் செல்வதையும், ஹஜ் யாத்திரைக்கு விமானத்தில் செல்வதையும் ஒப்பிட்டு இருப்பது சரியானது அல்ல. 

முடிவு : 

நம் தேடலில், சபரிமலை மற்றும் ஹஜ் யாத்திரை செல்லும் பக்தர்கள் குறித்துப் பரவும் படத்தில் இருக்கும் ஹஜ் யாத்திரை தொடர்பான புகைப்படம் மதீனாவில் இருந்து வங்கதேசம் டாக்காவிற்குச் செல்லும் விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader