சபரிமலையில் தந்தையிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட சிறுவன் எனப் பரவும் தவறான தகவல் !
பரவிய செய்தி
சிறுவனை சபரிமலை கோவிலில் அனுமதிக்காமல் தந்தையிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டான். சிறுவர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யுங்கள். வாக்களிப்பதற்கு முன் யோசிக்காவிட்டால் இந்துக்களின் நிலை இப்படித்தான் இருக்கும்.
மதிப்பீடு
விளக்கம்
பொதுவாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் “சபரிமலை கோவிலில் சிறுவன் ஒருவன் அனுமதிக்கபடாமல் தந்தையிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டான். சபரிமலையில் சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லை ” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அந்த வீடியோ, சிறுவன் ஒருவன் அப்பா என்று கதறி அழுவது போலவும், காவலர் ஒருவரைப் பார்த்து கை எடுத்து கும்பிடுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இந்து மக்கள் கட்சியினர் உட்பட பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் “சபரிமலையைக் காப்பாற்றுங்கள்” என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.
Hindu kids too need your attention/help/sympathy and justice in India.
Not just islamic kids from Gaza and Syria.
Let the tukde tukde gang know…!!! https://t.co/cijwd3AveR
— Indu Makkal Katchi (Offl) (@Indumakalktchi) December 12, 2023
Condition of Hindus in Kerala. They didn’t even spare a kid..#sabrimala pic.twitter.com/G4nh3ejmKw
— Mr Sinha (@MrSinha_) December 12, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கடந்த ஐந்து நாட்களாகவே கேரளாவின் பத்தனம்திட்டாவிற்கு அருகே அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.
அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் ஏராளமான பக்தர்கள் பந்தளத்தில் இருந்து திரும்பி வருகின்றனர். பம்பையிலிருந்து பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை KSRTC பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டதால், பலர் பத்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. வனப் பாதையில் பல வாகனங்கள் மணிக்கணக்கில் தேங்கி நிற்கின்றன.
#WATCH | சபரிமலையில் கட்டுக்கடங்காத ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!
சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் போலீசார் திணறல்#SunNews | #Sabarimala | #Kerala pic.twitter.com/CtWhP49pDt
— Sun News (@sunnewstamil) December 13, 2023
பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதியை ஆய்வு செய்ததில், பேருந்து நகரத் தொடங்கியதும் தான் அந்த குழந்தை அழ ஆரம்பிக்கிறது என்பதை அறிய முடிந்தது. அதைத் தொடர்ந்து காவலர் ஒருவர் சமாதானம் செய்ய முயல்கிறார். சரியாக வீடியோவின் 12-வது வினாடியில் அந்த குழந்தையின் தந்தை திரும்பி வருகிறார். தந்தையை பார்த்ததும் அந்த குழந்தை “அப்பா” என்று அழைக்கிறது. பின்பு இறுதியாக சமாதானம் அடைந்து கண்களை துடைத்துக் கொண்டு தனது கைகளை அசைத்து bye என்று சொல்வதையும் அந்த வீடியோவில் தெளிவாக காண முடிகிறது.
ஆனால் இந்த வீடியோ ‘சபரிமலையில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை’ என்ற நோக்கத்துடன் வலதுசாரிகளால் தவறாக திரித்து பரப்பப்பட்டு வருகிறது.
சபரிமலையில் இவ்வாறு கூட்டம் அதிகமாக வருவதை அடுத்து, KSRTC மூலம் கேரளாவின் கட்டகடாவிலிருந்து டிசம்பர் 11 முதல் சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வைரல் செய்யப்படும் வீடியோவில் சிறுவன் இருப்பது கேரள அரசு பேருந்து, ஆனால் போலீஸ் வாகனத்தில் சிறுவனை அழைத்துச் செல்வதாகவும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: பிரதமர் மோடி சபரிமலைக்குச் சென்றதாகப் பரப்பப்படும் கேரளா ஆளுநரின் வீடியோ !
மேலும் படிக்க: சபரிமலை அரவணப் பிரசாதம் தயாரிப்பை இஸ்லாமிய நிறுவனத்திற்கு அளித்ததாக பரவும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், சபரிமலையில் சிறுவனை அனுமதிக்காமல் தந்தையிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டான் என்று பரவி வரும் வீடியோ தொடர்பான தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.