ஐயப்பனின் ஆபரணங்களை தர பந்தள அரண்மனை மறுப்பா ?
பரவிய செய்தி
பந்தள மன்னரின் அறிவிப்பு.. இனி சபரிமலையில் உள்ள பதினெட்டாம்படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மனையில் உள்ள ஆபரணப் பெட்டி சபரிமலை சன்னிதானம் வராது. ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும். அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது. பெண்கள் நுழைந்த சபரிமலையில் இனி பந்தள மன்னரின் குடும்பத்தினரும் வரமாட்டார்கள் என இந்த அறிவிப்பின் மூலம் தீர்மானமாக அறிவிக்கின்றோம். மேலும், தீர்ப்பை கட்டாயமாக்கினால் சபரிமலை தந்திரிகளும் கூட்டாக பதவி விலகுவதோடு இனி சபரிமலைக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளார்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
சபரிமலை விவகாரத்தில் பந்தள அரண்மனையில் இருந்து வெளியான அறிக்கை என பரவும் செய்திகள் தவறான பிரச்சாரங்கள் எனவும், இவ்வாறான எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் பந்தள கொட்டாரம் நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளது.
விளக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிர்ப்புகள் அதிகளவில் உருவாகின. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டன கருத்துக்கள் உச்சத்தில் உள்ளன. அவர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் தவறான தகவலும் இணைக்கப்பட்டு பதிவிடப்படுகிறது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் பந்தள அரண்மனையில் இருக்கும் ஐயப்பன் ஆபரணங்கள் சன்னிதானத்திற்கு வராது என்ற தகவல் அரண்மனையில் இருந்து வெளியிடப்பட்டதாக தவறான செய்திகள் தமிழகம் வரை வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பந்தள அரண்மனை வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவித்து உள்ளது.
” பந்தள அரண்மனையில் இருந்து வெளியான தகவல் என பரவுவது போல் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடவில்லை என பந்தள கொட்டாரம் நிர்வாக கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் விழாக்காலங்களில் நடைபெறும் சடங்குகளில் பங்குபெறுவதை நிறுத்தி கொள்ளவில்லை என்றும் உறுதிப்படுத்தி உள்ளனர் ”
நீதிமன்றத்தின் உத்தரவை கோவில்கள் அதிகாரிகள் பின்பற்றுவதை தடுக்கும் எந்தவொரு முயற்சியையும் அரண்மனை மேற்கொள்ளவில்லை. பொதுமக்கள் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம் மற்றும் இந்த தவறான பிரச்சாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பந்தள அரண்மனை தெரிவித்துள்ளது.
“ பந்தள அரண்மனையின் அறிக்கை “
சமூக வலைத்தளங்களில் தமிழில் பந்தள அரண்மனை சபரிமலைக்கு ஆபரணங்களை அளிக்க மறுத்ததாக பதிவிடும் பதிவுகளில் அரண்மனையில் இருந்து வெளியிட்டதாக ஒரு அறிக்கையையும் இணைத்துள்ளனர்.
இதில், குறிப்பிட வேண்டிய தகவல் யாதெனில் அந்த அறிக்கை அரண்மனை குறித்து பரவிய தகவலுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையே. ஆனால், இங்கோ மறுப்பு தெரிவித்த அறிக்கையை எதிர்ப்பு தெரிவித்ததாக திசை திருப்பி வதந்தியை பரப்பி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பனின் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை பந்தள அரண்மனை எதிர்த்து ஆபரணங்கள் தர மறுப்பு தெரிவித்ததாக பரப்பப்படுபவை வதந்திகளே என்பது நிரூபணமாகிறது.