தோனியின் ரன் அவுட்-க்காக மன்னிப்பு கேட்டாரா சச்சின் டெண்டுல்கர் ?
பரவிய செய்தி
இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர் , ” தோனியின் ரன்-அவுட் தான் மும்பை அணியின் வெற்றிக்கு சாதமாக அமைந்தது. பொதுவாக, அம்பயர்கள் ஒரு விக்கெட்டை ரிவியூ செய்யும் போது அதில் சரியான நிலவரம் தெரியவில்லை என்றால், அந்த நேரத்தில் அம்பயர்கள் பேட்ஸ்மனுக்கு சாதமாக தான் தீர்ப்பு வழங்க வேண்டும். என்பது கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறை. ஆனால், நைஜல் லாங் நேற்று விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த ரன் அவுட்டுக்காக நான் தோனியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இந்த மாதிரியான தவறுகளை அம்பயர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி கோப்பையை வென்றது. இறுதி ஆட்டத்தில் கேப்டன் தோனியின் ரன் அவுட் பெரிய இழப்பாக இருந்தது. தோனியின் ரன் அவுட் மும்பையின் வெற்றிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது எனலாம். எனினும், தோனியின் ரன் அவுட்டில் பேட் க்ரீஸில் சரியாக இருக்கும் பொழுது, பந்து ஸ்டம்பில் அடித்து இருக்கும். இதற்கு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தது தவறு என்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவின.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மும்பை அணியின் மென்டர் ஆன கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ” தோனியின் ரன் அவுட்க்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் ” எனக் கூறியதாக ஓர் செய்தியில் இடம்பெற்றது படமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சச்சின் ஐபிஎல் வெற்றி பற்றி அளித்த பேட்டி பற்றி தேடுகையில் பின்வருமாறு கூறியது கிடைத்தது.
” தோனியின் ரன் அவுட் முக்கிய நிகழ்வாகும். ஆனால் நெருக்கடியான நிலையில் பும்ப்ராவின் பந்து வீச்சு பொருத்தமானது,அதேபோன்று மலிங்காவின் பந்து வீச்சும் முக்கியமானது. இறுதி ஓவரில் மலிங்கா அழகாக முடித்து வைத்து உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இறுதி போட்டியில் 129 ரன்களிலேயே வெற்றி பெற்றோம், எனவே எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இளைஞர்கள் மற்றும் அனுபவத்துடன் பயங்கரமான அணியாக இருக்கிறோம் என நினைக்கிறன் ” என்று சச்சின் கூறி இருந்தார்.
எந்தவொரு செய்தியிலும் தோனியின் ரன் அவுட் தவறு, அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சச்சின் கூறவில்லை.
எனினும், இந்த செய்தியை வெளியிட்டது யார் ? எப்பொழுது வெளியிடப்பட்டது ? என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால், அந்த வாக்கியத்திற்கு மேலே உள்ள படத்தின் கீழே ” Third Party image reference ” என இடம்பெற்றுள்ளது.
இதுபோன்ற வரிகள் Uc ஆஃப்களின் செய்தி போன்றவற்றில் பார்க்க முடியும். அந்த ஆஃப்-ல் உள்ள செய்திகளில் ஒரு சில மட்டுமே செய்தி நிறுவனத்தை சார்ந்தது. மீதமுள்ள பெரும்பாலானவை தனிநபர் கணக்கில் வெளியிடப்படும் செய்திகளே !