சாய் பல்லவி, ஆல்யா மானசா மீது ரிசர்வ் வங்கி வழக்குத் தொடுத்ததாகப் பொய் பரப்பும் பண மோசடி கும்பல்!

பரவிய செய்தி

டிவி நேரலையில் கூறிய கருத்திற்காக நடிகை சாய் பல்லவி மீது இந்திய ரிசர்வ் வங்கியால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

நடிகை சாய் பல்லவி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததாகவும் அதில் அவர் கூறிய தகவலின் காரணமாக அவர் மீது இந்திய ரிசர்வ் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

பரவக் கூடிய கார்டில், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த லிங்கில் உள்ள தளத்திலும் இந்திய எக்ஸ்பிரஸ் என்று உள்ளது. 

’பணம் சம்பாதிக்கும் எளிய வழி குறித்து நெறியாளர் அஸ்வத் சந்திரசேகரிடம் நடிகை சாய் பல்லவி கூறினார். அந்த வழிமுறையை தன்னிடம் சொல்லச் சொல்லி நெறியாளர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்த நிலையில், சாய் பல்லவியும் அதனை அவரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த முதலீட்டுத் தளத்தில் பணமும் முதலீடு செய்யப்பட்டது. 20வது நிமிடம் கழித்துப் பார்த்தால் முதலீடு செய்த 19,500 ரூபாய் பணம்,  42,850 ரூபாயாக அதிகரித்தது’ என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போது இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் இந்த நேர்காணல் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சாய் பல்லவி சொன்ன முதலீட்டுத் தளத்தில் அத்தொலைக்காட்சி ஆசிரியர் ஒருவர் முதலீடு செய்து சோதித்ததில் அது உண்மை எனத் தெரிய வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்ற கட்டுரை சின்னத்திரை நடிகை ‘ஆல்யா மானசா’ பெயரிலும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன ?

சாய் பல்லவி மீது ரிசர்வ் வங்கி வழக்கு தொடர்ந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளதாகப் பரவும் லிங்க் இந்தியன் எக்ஸ்பிரஸ் உடையது இல்லை. அந்த லிங்கில், ‘nuxlif.cloud’ என்று உள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் ‘indianexpress.com’ என்று தான் இருக்கும். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் மாதிரி இணையதளம் போல் உருவாக்கப்பட்டுள்ள போலி பக்கம்.

அதேபோல் அத்தளத்தில் உள்ள எந்த லிங்கை கிளிக் செய்தாலும் Immediate Maximum என்னும் தளத்திற்குத்தான் செல்கிறது. மேலும் இச்செய்தியின் தலைப்பைக் கொண்டு தேடியதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது. இதில் இருந்து இத்தளம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலியான தளம் என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

அந்த கட்டுரையில் சாய் பல்லவியின் நேர்காணல் எனப் பயன்படுத்தப்பட்ட படங்களில் ’சன் டிவி’ லோகோ இருப்பதைக் காண முடிந்தது. அதனைக் கொண்டு தேடியதில், சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்கு 2022, ஜூலை 13ம் தேதி சாய் பல்லவி அளித்த நேர்காணல் வீடியோ யூடியூபில் கிடைத்தது. 

அந்த நேர்காணலில், கார்கி திரைப்படம் பற்றியும் அவரது திரைப்பயண அனுபவங்களைப் பற்றியும் கூறுகிறார். பரவக் கூடிய கட்டுரையில் உள்ளது போல் முதலீடு தொடர்பாக எதையும் சாய் பல்லவி கூறவில்லை. மேலும் சாய் பல்லவியை நேர்காணல் எடுத்த நெறியாளரின் பெயர் ’அஸ்வத் சந்திரசேகர்’ எனப் பரவக் கூடிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது பெயர் ‘நிக்கி’

மேற்கண்ட இதே கட்டுரை சின்னதிரை நடிகை ஆல்யா மானசா பெயரிலும் பரப்பப்படுகிறது. அதுவும் சன் டிவி வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொடர்புப்படுத்தித்தான் பரப்பப்படுகிறது. இதுவும் முழுக்க முழுக்க பொய்யான தகவலாகும். 

Link

பிரபலங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களிடம் பணம் பறிப்பதற்காக மோசடி கும்பல் உருவாக்கிய போலி செய்திதான் இது. யாரும் இத்தகைய செய்திகளை நம்பவோ முதலீடு செய்யவோ வேண்டாம். 

முடிவு : 

நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஆல்யா மானசா தொலைக்காட்சி நேரலையில் கூறிய தகவலுக்காக அவர்கள் மீது இந்திய ரிசர்வ் வங்கி வழக்குத் தொடுத்துள்ளதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. இது பண மோசடி கும்பல் போலியாக உருவாக்கப்பட்ட செய்தி.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader