சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டதாக தவறான செய்தியை வெளியிட்ட முக்கிய ஊடகங்கள் !

பரவிய செய்தி

போராட்டத்தை கைவிட்டார் சாக்‌ஷி மாலிக்Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பிரபல இந்திய மல்யுத்த வீரர்கள் WFI (Wrestling Federation of India) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறியும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவரை கைது செய்யக் கோரியும் கடந்த ஏப்ரல் 23-லிருந்து டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து கடந்த மே 28 அன்று புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி அவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது டெல்லி போலீசார் நடத்திய அடக்குமுறை இந்திய அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மல்யுத்த வீரார்கள் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தப் பின் சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டார் என்று கூறி இந்தியா டுடே, புதிய தலைமுறை, நியூஸ் தமிழ், ஒன் இந்தியா, ABP நாடு உட்பட பல முக்கிய ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியிட்டு வருகின்றன.Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் செய்தி குறித்து மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் ஏதாவது செய்தி வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்து அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் தேடியதில், இது குறித்து இன்று (ஜூன் 5) அவர் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

Archive Link

அதில், “இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, யாரும் பின்வாங்க மாட்டோம். சத்தியாகிரகத்துடன் செயல்பட்டு, ரயில்வேயில் எனது பணியை தற்போது செய்து வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.” என்று குறிப்பிட்டிருந்தார். 

Twitter link 

மேலும், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், போராட்டத்தை கைவிட்டதாக போலிச் செய்திகள் பரவி வருகின்றன எனப் பதிவிட்டு இருக்கிறார்.

மல்யுத்த வீரர்கள் அனைவரும் தங்களது அரசு பணிகளுக்கு செல்லாமல் இதுவரை போராடி வந்துள்ளனர். ஆனால் தற்போது தங்கள் அரசு வேலைகளில் மீண்டும் இணைந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக அனைவரும் இவர்கள் போராட்டத்தை கைவிட்டதாக பரப்பியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

மேலும் படிக்க : பாகிஸ்தானில் பெண்ணின் கல்லறையைப் பூட்டிய பெற்றோர்கள் எனத் தவறான செய்தியைப் பரப்பிய முக்கிய ஊடகங்கள் !

முடிவு:

நம் தேடலில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டார் எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு நாங்கள் போராட்டத்தை கைவிடவில்லை, நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader