This article is from Jan 23, 2019

படேல் சிலை விமர்சனத்திற்கு படேல் மருத்துவமனை பதிலா?

பரவிய செய்தி

சிலை வைத்த பணத்தில் மருத்துவமனை கட்டியிருக்கலாமே என்றவர்களே.. சிலையும் வச்சாச்சு, மருத்துவமனையும் கட்டியாச்சி..

மதிப்பீடு

சுருக்கம்

  • சர்தார் பட்டேல் மருத்துவமனை 2013 ஆம் ஆண்டில் அம்மாநில அரசு கொண்டு வந்த திட்டம். அம்மருத்துவமனை பிரதமர் மோடி அவர்களால் 2019 ஜனவரி 17-ம் தேதி திறக்கப்பட்டது.
  • அதேபோன்று சர்தார் படேல் சிலையும் 2010-ல் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடி கொண்டு வந்த திட்டம்.

விளக்கம்

குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை தோராயமாக ரூ.3000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டதற்கு எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் எழுந்தன.

சிலை வைத்த பணத்திற்கு மருத்துவமனை, பல்கலைக்கழகங்கள் கட்டி இருக்கலாமே என்ற முக்கிய கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், தற்போது குஜராத்தில் கட்டப்பட்ட மருத்துவமனையை வைத்து சிலையும் வைச்சாச்சு, மருத்துவமனையும் கட்டியாச்சு என மோடி ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

குஜராத்தில் சர்தார் படேல் பெயரில் உருவாகியுள்ள மருத்துவமனை பற்றியும், படேல் சிலை பற்றியும் சில தகவல்களை கூற விழைகிறோம்.

சர்தார் படேல் மருத்துவமனை :

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் 750 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்(sardar Vallabhbhai patel institute of medical science and research) பிரதமர் மோடி அவர்களால் 2019 ஜனவரி 17-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் 17 மாடிக் கட்டிடத்தில் 1500 படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை பணிகள் ஐந்து வருடங்களுக்கு முன்பு மாநில அரசு உடன் அகமதாபாத் மாநகராட்சி மூலம் தொடங்கப்பட்டது.

அகமதாபாத் மாநகராட்சி பல்நோக்கு மருத்துவமனைக்கு சர்தார் வல்லபாய் படேல் பெயரை வைப்பதாக 2013 மே மாத செய்திகளிலேயே வெளியாகி உள்ளது.

முடிவு : 

குஜராத்தில் படேல் சிலை அமைக்கும் திட்டத்தை 2010-ல் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவித்தார். 2013-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான நிதியுதவி பற்றிய விவரங்களை முன்பே கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : வல்லபாய் படேல் சிலை நிதியளித்தது யார்? யார் ?

சர்தார் படேல் மருத்துவமனை 2013 ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம். Ahmedabad municipal corporation (AMC) மருத்துவமனைக்கு சர்தார் வல்லபாய் படேல் பெயர் சூட்டப்பட்டது. இதற்கான செலவு 750  கோடியாகும்.

சிலை வைத்ததும், மருத்துவமனைக் கட்டியதும் குஜராத் மாநில அரசே ! 3000 கோடிக்கு சிலை வைத்ததற்கு மருத்துவமனை, நீர்பாசனத் திட்டங்கள், பல்கலைக்கழகம் கொண்டு வந்து இருக்கலாமே என்ற கேள்வி எடுபடாமல் இருக்க படேல் மருத்துவமனையை கையில் எடுத்துக் கொள்கின்றனர்.

மருத்துவமனையின் மதிப்பு 750 கோடியே.. இதுபோன்ற 4 மருத்துவமனைகளை உருவாக்கி இருக்க முடியும். இந்தியாவில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களின் நிலையை அங்கு சென்று பார்த்தால் தெரியும்.

இந்தியாவில் 10,189 பேருக்கு ஒரு அரசாங்க மருத்துவரும், 2,046 பேருக்கு ஒரு அரசு மருத்துவமனை படுக்கை வசதி என்றும், 93, 343 பேருக்கு ஒரு மாநில அரசு மருத்துவமனை என்று இருப்பதாக நேஷனல் ஹெல்த் ப்ரொபைல் 2017  அறிக்கை தெரிவிக்கிறது. அடிப்படை தேவைகள் எப்பொழுது முழுமையடைகிறதோ அன்றே தேசம் உயரும்.

 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader