சர்தார் பட்டேல் கல்வி உதவித்தொகை மத்திய அரசின் திட்டமல்ல !
பரவிய செய்தி
சர்தார் பட்டேல் கல்வி உதவி தொகை -2020 . கல்லூரி மாணவர்களுக்கு ரூ.15000.
மதிப்பீடு
சுருக்கம்
கல்லூரி மாணவர்களுக்கான சர்தார் பட்டேல் கல்வி உதவித்தொகை மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையல்ல.
விளக்கம்
தமிழகத்தின் கிள்ளியூர் ஒன்றிய பாஜகத் தலைவர் சி.எஸ்.செந்தில்குமார் என்பவர் ” சர்தார் பட்டேல் கல்வி உதவித்தொகை ” என்ற திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 15,000 ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் புகைப்படத்துடன் தன் புகைப்படத்தையும் இணைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதற்கான ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் ஒருவரால் வெளியிட்ட பதிவால் கல்லூரி மாணவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து உதவித் தொகை கிடைப்பதாக எண்ணி சமூக வலைதளங்களில் வைரலாகி மாணவர்கள் கணினி மையங்களை அணுகத் தொடங்கி உள்ளனர்.
” சர்தார் பட்டேல் கல்வி உதவித்தொகை ” திட்டம் மத்திய அரசின் திட்டமே அல்ல. Buddy4study என்ற தன்னார்வு அமைப்பு ” Sardar Patel Scholarship for Students Pursuing Graduation ” எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதற்காக சில ஆவணங்களையும் கேட்டுள்ளனர். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, என்ஜிஓ அமைப்பே.
Sardar Patel Scholarship for Students Pursuing Graduation’ is open for underprivileged #students who are studying in the 1st/2nd year of a 3 year #graduation programme(in any stream). #Scholarship amount – INR 15,000. #Application deadline – 31.5.2020 https://t.co/5JsjNghd6F pic.twitter.com/js6DItX7S9
— Buddy4Study (@Buddy4Study) April 6, 2020
2020-ம் ஆண்டிற்கான Buddy4study கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. உதவித்தொகை பெறுவதற்கான ஆவணங்கள், செயல்முறை உள்ளிட்டவை அதன் இணையதளத்தில் அளிக்கப்பட்டு உள்ளது. சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கென ஒவ்வொரு வருடமும் என்ஜிஓ அமைப்பு மூலம் இந்த உதவித்தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், இதற்கென சில கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் உள்ளன.
Buddy4study என்ற தன்னார்வ அமைப்பு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வரும் கல்வித்தொகையை மத்திய அரசு வழங்குவது போன்ற தோற்றத்தில் பிரதமரின் புகைப்படத்துடன் பாஜகவைச் சேர்ந்தவர் பதிவிட்டதால் மக்களும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இது மத்திய அரசின் திட்டம் அல்ல. தவறான தகவலை பகிர வேண்டாம்.