சாரிடான் உட்பட 328 மருந்து வகைகளுக்கு தடை..!

பரவிய செய்தி
வலி நிவாரணி மருந்து சாரிடான் உட்பட 328 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை என்பதால் தடை பிறப்பித்துள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
328 வகை நிலையான டோஸ் சேர்க்கை(FDC) தடை செய்யப்பட்டுள்ளதால் அதனை கொண்டிருக்கும் சாரிடான் உட்பட அனைத்து மருந்து பிராண்ட்களும் பாதிப்படையும்.
விளக்கம்
இந்திய சந்தையில் மருந்துப் பொருட்களின் விற்பனை பன்மடங்கு அதிகரித்து கோடிக்கணக்கான மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், பல மருந்துகள் ஆபத்தானவையா என்ற அச்சம் அவ்வபோது மக்கள் மனதில் உதிக்கும். அவ்வாறான பாதுகாப்பற்ற 328 மருந்துகளை தடை செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி இந்திய அரசாங்கம் 344 Fixed dose combination (FDC) மருந்துகளை தடை செய்வதாகவும், பிறகு கூடுதலாக 5 மருந்துகள் இணைக்கப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு தொடர்ந்தனர்.
FDC மருந்துகள் தடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 2017 டிசம்பர் 15-ம் தேதி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு (drugs technical advisory board) சோதனை நடத்தி ஆய்வறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்தது.
மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு சமர்ப்பித்த அறிக்கையில், 328 மருந்துகளின் உட்பொருட்களில் சிகிச்சைக்கு பயனளிக்கக்கூடியவை இல்லை(ஆபத்தானவை) என நியாயப்படுத்துவதாகவும், இதனால் மக்களுக்கு ஆபத்து நேரிடலாம் எனவும் மேற்கொள்காட்டி உள்ளனர். மேலும், ஆலோசனை குழு இந்த மருந்துகளை தடை செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் நியமித்த மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தடை பரிந்துரை ஏற்கப்பட்டு உடனடியாக 328 FDC மருந்துகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 6 மருந்துகளின் தயாரிப்பில் சிகிச்சைக்கு உதவும் உட்பொருட்கள் பற்றி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவு குறித்து சுகாதார அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Full list: Central drugs standard control organization notification
328 FDC தடை உத்தரவால் 6000 பிராண்டுகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வலிநிவாரணி மருந்தான சாரிடான், குளுகோனாம் பிஜி, பாண்டெர்ம், டேக்சிங் ஏ.இசட், ஆண்டிபயாடிக் மருந்தான லுபிடிகிளாக்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்களின் மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பிரபல மருந்துகள் | தப்பித்த பிரபல மருந்துகள் |
சாரிடான்(வலிநிவாரணி) | கோரெக்ஸ் காஃப் சிரப்( இருமல்) |
குளுகோனாம் பிஜி | டிகோல்ட் டோட்டல் |
டேக்சிங் ஏ.இசட் | பென்சிடில் காஃப் லிங்க்ட்ஸ் |
லுபிடிகிளாக்ஸ் |
ஆனால், பென்சிடில் காஃப் லிங்க்ட்ஸ், டிகோல்ட் டோட்டல், கோரெக்ஸ் காஃப் சிரப் போன்ற மருந்துகள் தடையில் இருந்து தப்பித்து உள்ளன.
2016 ஆம் ஆண்டு தடை செய்த 344 மருந்துகளில் 15 மருந்துகள் 1988 ஆம் ஆண்டிற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்டதால் அவை அறிவிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
விற்பனை செய்யப்படும் பல பிரபலமான காஃப் சிரப், வலி நிவாரணி, சளி மருந்து உள்ளிடவை ஆண்டிற்கு ரூ.750 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. தடை செய்யப்பட்ட மருந்துகளின் மதிப்பு ரூ.2500 கோடி அளவிற்கு இருக்கும்.
இந்திய மருந்துகளின் விற்பனையில் நான்கில் ஒரு பங்கு விற்பனை மதிப்பை FDC மருந்துகள் கொண்டுள்ளன. Fixed dose combination மருந்துகளின் மொத்த விற்பனை மதிப்பு 1.3 ட்ரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரை காக்கும் மருந்துகள் பணம் சம்பாரிக்கும் தொழிலாக சிலரால் மாற்றப்பட்டதே மக்களுக்கு ஆபத்தான மற்றும் பயனற்ற மருந்துகளின் வருகைக்கு ஆதாரம்..!!