இயற்கை சூழ்ந்த சத்தியமங்கலம் பண்ணாரி சாலையா ?| நம்ம ஊரு இல்லை !

பரவிய செய்தி
இயற்கை எழில் சூழ்ந்த சாலை. சத்தியமங்கலம் பண்ணாரி சாலை.
மதிப்பீடு
விளக்கம்
இரு பக்கமும் இயற்கை காடு சூழ்ந்து இருக்க பிரம்மிப்பாக காட்சியளிக்கும் சாலையின் புகைப்படம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நீண்டகாலமாக உலாவி வரும் புகைப்படங்களில் ஒன்றாக இடம்பெறுவதை காணலாம்.
பல ஆண்டுகளாக பகிரப்படும் புகைப்படத்தை அக்டோபர் 17-ம் தேதி கல்யாணசுந்தரம் என்பவர் ” நாட்டு மருந்து சித்த மருத்துவம் ” என்ற முகநூல் குழுவில் ” இயற்கை எழில் சூழ்ந்த சாலை. சத்தியமங்கலம் பண்ணாரி சாலை ” என இப்புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அந்த பதிவு 6 ஆயிரம் லைக்குகள், ஆயிரம் ஷேர்களை கடந்து பரவி வருகிறது.
சத்தியமங்கலத்தில் இருப்பதாக முகநூலில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் சாலை உண்மையில் எங்கு இருக்கிறது என்பதை பலரும் அறிந்து இருக்கவில்லை. இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்த்தால், ” Kangaroo island road Australia ” என காண்பிக்கின்றது.
கங்காரோ தீவு சாலை :
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காரோ என்ற தீவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கும் பகுதியில் ஒன்றாக இச்சாலையும் அமைந்து இருக்கிறது. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்கள் கங்காரோ தீவில் இருக்கும் சாலையை தேர்ந்தெடுப்பார்கள் .
சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக இந்த சாலையின் புகைப்படத்தை பல சுற்றுலா இணையதளங்கள் பயன்படுத்தி உள்ளனர். உதாரணமாக, southAustralia என்ற சுற்றுலா இணையதளத்தில் இப்படமே முகப்பு படமாக அமைந்து இருக்கிறது.
2015-ல் ” Driving on Kangaroo Island’s roads ” என்ற தலைப்பில் வெளியான யூட்யூப் வீடியோவில் கங்காரோ தீவு சாலையில் ஒருவர் பயணிப்பதை காணலாம். இதற்கு முன்பாக 2017-ல் இதே சாலையை மையமாக வைத்து அரசியல் நையாண்டிக் கதை ஒன்றை முகநூலில் பதிவிட்டு இருந்தனர் . அப்பொழுதே, இந்த சாலை குறித்த கட்டுரையை யூடர்ன் வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : பாலைவனமாக இருந்த பகுதியா இப்படி மாறியுள்ளதா ?
முடிவு :
நம்முடைய தேடலில் , ஆஸ்திரேலியா நாட்டின் கங்காரோ தீவில் உள்ள சாலையை தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் பண்ணாரி சாலை என தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. நீண்டகாலமாகவே இந்த புகைப்படத்துடன் பொருந்தாத தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.