சவூதியில் அரசக் குடும்பத்தினர் திருவாசகத்தை தலையில் சுமந்து செல்வதாக வதந்தி !

பரவிய செய்தி
சவூதி அரேபியாவில் மன்னர் தலைமையில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கவாசக சுவாமிகள் எழுதிய திருவாசகத்தை தலையில் சுமந்து செல்லும் அற்புதமான அந்த காட்சியை பாருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
சவூதி அரேபியா நாட்டின் மன்னர் தலைமையில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தை தலையில் சுமந்து செல்லும் காட்சி என 45 நொடிகள் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவில் *மன்னர்* தலைமையில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் *மாணிக்கவாசக சுவாமிகள்* எழுதிய *”திருவாசகத்தை”* தலையில் சுமந்து செல்லும் காட்சியைப் பாருங்கள்.
👇👇👇 pic.twitter.com/Y1ZiDUWORG
— Nvt Samy (@NvtSamy) December 23, 2021
45 நொடிகள் கொண்ட வீடியோவில், சங்கு ஒலிக்க பெண் ஒருவரின் தலையில் புத்தகம் ஒன்றை சுமந்து கொண்டு செல்கிறார்கள். பின்னால் சிலர் வருகையின் போது ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிடுவது இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2016-ம் ஆண்டு அபுதாபியில் மொராரி பாபு தலைமையில் நடைபெற்ற ராம் கதா என்ற இந்து பிராத்தனை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட முழுமையான வீடியோவில் வைரல் செய்யப்படும் காட்சி இடம்பெற்று இருக்கிறது.
தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்து பிராத்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அரபு நாட்டின் அரச குடும்பத்தினர் அல்ல. வீடியோவில் இடம்பெற்று இருக்கும் நபர் அரபு நாட்டின் விவகாரங்கள் குறித்து உரையாற்றுபவரான சுல்தான் அல் கஸ்ஸாமி.
மேலும் படிக்க : “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறி உரையைத் தொடங்கியது அமீரகத்தின் இளவரசரா ?
2018-ம் ஆண்டில் சுல்தான் அல் கஸ்ஸாமி பேசும் வீடியோவை ஐக்கிய அரபு அமீரகத்தின் சுல்தான் ஜெய்ஸ்ரீராம் எனக் கூறி தனது உரையை தொடங்கியதாக தவறாக பரப்பி இருந்தனர்.
2016-ம் ஆண்டில் மொராரி பாபு அளித்த பேட்டியில், ” வீடியோவில் தலையில் ராமாயணத்தை சுமந்து செல்லும் பெண் அபுதாபியின் சுல்தான் மனைவி அல்ல. அவர் எங்கள் அமைப்பின் தன்னார்வலர்களில் ஒருவரின் மகள் சியா ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், சவூதி அரேபியாவில் மன்னர் தலைமையில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருவாசகத்தை தலையில் சுமந்து செல்லும் காட்சி எனப் பரப்பப்படும் வீடியோ தவறானது.
2016-ல் அபுதாபியில் மொராரி பாபு தலைமையில் நடைபெற்ற ராம் கதா என்ற இந்து பிராத்தனை நிகழ்ச்சியில் ராமாயண புத்தகத்தை தலையில் சுமந்து செல்லும் காட்சி தவறாகப் பரப்பப்படுகிறது என அறிய முடிகிறது.