சவூதியில் 35 ஆண்டுகளாக பணிபுரிந்தவருக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை | வைரல் பபுகைப்படம் !
பரவிய செய்தி
சவுதியில் 35 வருடங்களாக ஒரே வீட்டில் விஸ்வாசமான , கடின உழைப்பாளியாக இருந்த பாபு என்கிற இந்தியர் பணிஓய்வு பெறும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பிரியாவிடை கொடுக்கும் நெகிழ்ச்சியான நேரம்.
மதிப்பீடு
விளக்கம்
சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்வதில் இந்தியர்கள் அதிகம் என அனைவரும் அறிவர். இந்தியாவைச் சேர்ந்த மீடோ பாபு என்பவர் சவூதி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ” ஆவாத் குதீர் அல் ஷிமாரி ” குடும்பத்தின் வீட்டில் 35 ஆண்டுகளாக விவசாயம், வீட்டு வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில் பாபு வயது மூப்பின் காரணமாக வேலையில் இருந்து ஓய்வு பெற்று இந்தியா திரும்புவதற்கு முன்பாக சவூதியில் அவருக்கு, அக்குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாபுவை கட்டித்தழுவி, முத்தமிட்டு உபசரித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்டு இருந்தனர்.
35 ஆண்டுகள் விசுவாசமாகவும், கடினமாகவும் உழைத்த மீடோ பாபுவிற்கு பரிசுகளையும், தேவையான பணமும், அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதாக உறுதி அளித்தும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக 2018-ல் லைப் இன் சவூதி அரேபியா மற்றும் அல்அரேபியா உள்ளிட்ட இணையதளங்களில் புகைப்படங்கள் உடன் வெளியாகி இருக்கின்றன.
மேலும், பாபுவிற்கு உபசரிப்பு அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை சவூதியின் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
#الوفاء في #السعودية رجلاً يمشي على قدميْه، وفِي #حائل #الوفاء قبيلة حب وصدق ومكارم أخلاق ..هذا ما جسدته عائلة عواد خضير الشمري وهي تودع العامل ميدو بابو الذي يعمل لديها لأكثر من 35 عاما بحفل وداع وتقديم هدايا مادية وعينيه من جميع افراد الأسرة.
هي صورة حقيقية للإسلام
#يوم_الجمعه pic.twitter.com/80cKGdEG5X— متعب العواد (@motabalawwd) ৩০ নভেম্বর, ২০১৮
இந்தியர் ஒருவருக்கு சவூதி நாட்டின் குடும்பம் அளித்த மரியாதை சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகியது. எனினும், சவூதியில் வீட்டில் பணிபுரிபவர்களில் 60% பேருக்கு பாபுவிற்கு கிடைத்தது போன்ற நல் மரியாதை அளிக்கப்படுவதாகவும், மீதமுள்ள 40% பேர் மோசமாக நடத்தப்படுவதாக சவூதியில் வேலை செய்யும் அப்துல் வஹாப் என்பவர் விகடனுக்கு அளித்து பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் அந்த வீட்டில் இருக்கும் ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், ஓட்டுனராக இருக்கும் சில ஆண்களுக்கு விடுப்பு கிடைப்பதில் பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறி இருந்தார்.
பிழைப்பிற்காக பிற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு முதலாளிகள் தகுந்த உபசரிப்பை அளிக்கிறார்கள் என்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் அங்குள்ள பிரச்சனைகள் குறித்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.