சாவர்க்கர் பறந்து சென்ற புல்புல் பறவையை அடைத்து வைத்ததாக தகராறு செய்த பாஜக நிர்வாகி கைதா ?
பரவிய செய்தி
சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி காடை, கோழி கறி விற்கும் கடையில் தகராறு செய்த பாஜக நிர்வாகியை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தின் எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் வி.டி.சாவர்க்கர் அந்தமானில் அடைக்கப்பட்டு இருந்த சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்து செல்வதுண்டு. அதுமட்டுமின்றி, சாவர்க்கர் அந்த புல்புல் பறவையின் இறகுகளில் ஏறி ஒவ்வொரு நாளும் தன் தாய்நாட்டை தரிசித்து வருகிறார் ” என இடம்பெற்றது நாடு முழுவதும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், சாவர்க்கர் பறந்து சென்ற புல்புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி காடை, கோழி கறி விற்கும் கடையில் தகராறு செய்த பாஜக நிர்வாகியை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக புதியதலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
#அடேய்….இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும்வரை நமக்கெல்லாம் கடைசிவரை #அண்ணாமலை தான் தமிழக #பிஜேபி தலைவர். #மோடி ஜி தான் இந்திய பிரதமர்.! 😂 pic.twitter.com/WTCCs6cKoc
— விஷ்வா I Viswa (@chennaiviswa2) September 1, 2022
உண்மை என்ன ?
புல்புல் பறவை வைத்திருப்பதாக கறிக் கடையில் பாஜக நிர்வாகி தகராறு செய்ததாகக் கூறப்படும் செய்தி குறித்து தேடுகையில், அவ்வாறான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. புதிய தலைமுறை சேனலிலும் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை நியூஸ் கார்டில் செய்தியானது எடிட் செய்யப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. அந்த நியூஸ் கார்டில் இருப்பவர் யார் எனத் தேடுகையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட போது வெளியான நியூஸ் கார்டு என அறிய முடிந்தது.
ஏப்ரல் 8ம் தேதி, ” முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது. முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் நடவடிக்கை ” என புதிய தலைமுறை நியூஸ் கார்டில் இடம்பெற்று உள்ளது. மேற்காணும் நியூஸ் கார்டில், போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், சாவர்க்கர் பறந்து சென்ற புல்புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி காடை, கோழி கறி விற்கும் கடையில் தகராறு செய்த பாஜக நிர்வாகியை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தாக பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.