கோவிலுக்கு மாலை போட்டதால் மாணவனை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னார்களா?
பரவிய செய்தி
கோவிலுக்கு மாலைபோட்டதனால் மாணவனை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர். கையில் ஆசிட் கொட்டியதால் படுகாயம்
மதிப்பீடு
விளக்கம்
கோவிலுக்கு மாலை போட்டு இருந்த மாணவனை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதால், அங்கிருந்த ஆசிட் மாணவனின் இடது கையில் கொட்டி படுகாயம் அடைந்துள்ளார் என்ற செய்தியுடன் சிறுவனின் புகைப்படம் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ugn Madhavan என்ற முகநூல் பக்கத்தில் சிறுவனின் புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்ட தகவல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. அவர் சில முகநூல் குழுக்களிலும் தன் பதிவை பகிர்ந்து இருந்தார். ஆனால், தற்பொழுது அந்த பதிவு நீக்கப்பட்டு உள்ளது.
Website news link | archived link
மாலை போட்ட காரணத்தினால் கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக சமூக வலைதளங்கள் மட்டுமின்றி சில இணையதள செய்திகளிலும் சிறுவனின் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
” தூத்துக்குடி மாவட்டத்தின் இடையர்காட்டில் உள்ள TDTA நல்லமேய்ப்பர் உயர்நிலைப் பள்ளி எனும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை கொண்டு பள்ளியை சுத்தம் செய்ய சொல்லியுள்ளார். இதில், 7-ம் வகுப்பு மாணவர்களை கொன்டு கெமிஸ்ட்ரி லேப்பில் உள்ள அசிட் பாட்டில்களை அப்புறப்படுத்த சொல்லி உள்ளார் பள்ளியின் தலைமையாசிரியர்.
இதில், ஆசிட் பாட்டில்களை கையில் எடுத்துச் செல்லும் பொழுது பின்னால் வந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதியதில் ஒரு மாணவனின் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இடது கையில் ஆசிட் கொட்டி படுகாயம் ஏற்பட்டு உள்ளது, இதேபோல் மற்றொரு மாணவனின் காலில் ஆசிட் கொட்டி காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, மாணவர்கள் தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக ” நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கென் க்ரானிக்கல் உள்ளிட்ட ஆங்கில செய்திகளில் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்த வழக்கறிஞர்கள் அதிசயக் குமார் மற்றும் ரமேஷ் பாண்டியன் ஆகிய இருவரையும் யூடர்ன் தொடர்பு கொண்டு பேசினோம்.
வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கூறுகையில், ” அந்த பகுதியில் பட்டியலின மக்கள் அதிகம். அப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. கோவிலுக்கு மாலை போட்ட காரணத்தினால் கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக கூறுவது தவறான தகவல். பொதுவாகவே, பள்ளியை சுத்தம் செய்ய அனைத்து மாணவர்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். அப்பொழுது, அந்த மாணவர்களுக்கு எதிர்பாராத விதமாக கையில், காலில் ஆசிட் கொட்டி உள்ளது. 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கெமிஸ்ட்ரி லேப் மற்றும் மற்ற மாணவர்களை கழிவறை உள்ளிட்ட பள்ளியின் பொதுவான பகுதிகளை (குறிப்பிட்டு இந்த பகுதி என சொல்ல விரும்பவில்லை) சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறார்கள். சுத்தம் செய்ய சொன்னது கண்டிப்பாக தவறு. மாணவர்களை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள செய்தால் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யலாம் என சட்டங்கள் உள்ளன. இருப்பினும், இந்த சம்பவத்தில் இந்து, கிறிஸ்டியன் என பரவும் மதம் சார்ந்த தகவல்கள் 1 சதவீதம் கூட உண்மை இல்லை ” எனக் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் அதிசயக் குமார் கூறுகையில், ” இந்து, கிறிஸ்தவர் என்கிற பிரச்சனை அந்த பகுதியில் இல்லை. இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்ளை பணி செய்ய வைப்பதே நடக்கிறது. மாணவர்களை பள்ளியில் வேலை செய்ய வைக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் எழுதும் தகவல்கள் தவறானது, இந்த பகுதியில் அப்படி ஏதும் இல்லை. சாதிய ரீதியான பிரிவினை இருக்குமே தவிர மத ரீதியான பிரிவினை அங்கு இல்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
TDTA நல்லமேய்ப்பர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்ய வைத்துள்ளனர். அதில், கோவிலுக்கு மாலை போட்ட சிறுவனை மட்டும் கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி, ஆசிட் கொட்டி காயம் ஏற்பட்டதாக கூறுவது தவறாக பரப்பப்படும் தகவல். அந்த சிறுவன் மாலை போட்டு இருந்துள்ளார். 6-ம் மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களை பலரை கொண்டு பள்ளியின் பல பகுதிகளை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.
கெமிஸ்டரில் லேப்பில் இருந்த ஆசிட் கொட்டியே மாணவர்களுக்கு கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது. தலைமை கல்வி அதிகாரி ஞான கெளரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளார்.
சில பள்ளிகளில் மாணவர்களை கொண்டு பள்ளியை சுத்தம் செய்வதில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். எந்த மதம், சாதியை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை மற்றும் இக்கொடுமைகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டியவை.
Update :
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” TDTA நல்லமேய்ப்பர் உயர்நிலைப் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வர இருந்த காரணத்தினால் பள்ளியின் கெமிஸ்ட்ரி லேப்பில் 20 ஆண்டுகளாக இருந்த ஆசிட் பாட்டில்களை அகற்ற 7 வகுப்பு மாணவர்கள் சிலரை தலைமையாசிரியர் பயன்படுத்தி உள்ளார். இதற்காக தோண்டப்பட்ட குழியில் இரு பாட்டில்களை போட்ட பிறகு, மீதமுள்ள பாட்டில்களை வைத்திருந்த மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஆசிட் தெளித்து மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அப்பள்ளியில் மதம், சாதி ரீதியாக மாணவர்களை வேலை வாங்கியதாக கூறுவது தவறான தகவல். மேலும், மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக கூறுவதும் தவறு. எங்களின் ஆய்வில் , அப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கான கழிவறைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை என்பதை அறிந்தோம். இந்த விவகாரம் குறித்து அப்பகுதி மக்களிடம் பேசி தீர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களும் வழக்கம் போல பள்ளிக்கு செல்வது தொடர்கிறது. ஆனால், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் ” எனத் தெரிவித்து உள்ளனர்.