சீமான் சொன்னதைப் போல் சலங்கை ஒலி வந்த போது கமல் தந்தை உயிருடன் தான் இருந்தார்!
பரவிய செய்தி
சீமான் பிறந்தது 1966.. 1983இல் கமல் அப்பா மேல விழுந்துட்டாராம். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து சலங்கை ஒலி படத்துக்கு போனாங்களாம்.. மனுஷன் பொய் பேசலாம். அதுக்குனு ஏக்கர் கணக்குல பேச கூடாது.
கமல் அப்பா Nov 7 1959லேயே செத்துடாரு யா ..
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நேர்காணலில் நடிகர் கமல்ஹாசன் தந்தை சீனிவாசன் உடனான தனது வாழ்க்கை நிகழ்வினை பற்றிக் குறிப்பிடுகிறார்.
அதில், ” நான் கல்லூரி படிக்கும் போது சலங்கை ஒலி படம் பார்க்கச் சென்றேன். அப்போது தனக்குச் சைக்கிளில் கால் எட்டாததால் குரங்கு பெடலில் ஒட்டிச் சென்றேன். அப்படிச் செல்கையில் ஆற்று மணலில் சறுக்கி ஐயா மீது (கமல்ஹாசன் தந்தை சீனிவாசன்) மோதிவிட்டேன். பின்னர் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து சலங்கை ஒலி படத்திற்குச் சென்றோம் ” எனப் பேசியுள்ளார்.
https://twitter.com/rajiv_dmk/status/1592925762893795332?t=LSQQA6UKJ6-6ee4AHRIjjg&s=08
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பொய் சொல்றான் பாருங்க..
அடேய் பிராடு @SeemanOfficial நீ ஒரு கேடுகெட்ட பொருக்கி டா..
1983இல் கமல் அப்பா மேல விழுந்துட்டாராம்.
அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து சலங்கை ஒலி படத்துக்கு போனாங்களாம்..கமல் அப்பா இறந்தது 7 Nov 1959 pic.twitter.com/ZpfZvNGLGA
— Durai-The Dravidian Stock (@ArjunanDurai) November 17, 2022
அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் திமுகவைச் சார்ந்த ராஜீவ் காந்தி முதற்கொண்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர். அப்பதிவில் கமலின் அப்பா இறந்தது 1959, நவம்பர் 7ம் தேதி, சீமான் பிறந்தது 1966, சலங்கை ஒலி படம் வெளியானது 1983. இப்படி இருக்கையில் சீமான் எப்படி கமலின் தந்தையுடன் சலங்கை ஒலி திரைப்படம் பார்த்திருப்பார் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
திமுக-வினர் கூறுவது போலக் கமல்ஹாசனின் தந்தை 1959ல் மறைந்தாரா எனத் தேடினோம். கமலின் தந்தை பரமக்குடி சீனிவாசன் 1983, மே 25ம் தேதி வெளியான ஆனந்த விகடன் இதழுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
“என் மகனிடம் பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன்! – கமலின் தந்தை பரமக்குடி சீனிவாசன் Vikatan Vintage” என்ற தலைப்பில் நெல்லை குரலோன் என்பவர் எழுதியுள்ளார்.
அதில், முதல் கேள்வியாக ”மகனுக்குத் தேசிய அவார்டு (‘மூன்றாம் பிறை’) கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!” எனக் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர் ”சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?” எனப் பதிலளித்துள்ளார். கமல்ஹாசன் நடித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் வெளியானது 1982.
இதே போல், ஆனந்த விகடன் கமலின் குடும்ப புகைப்படம் ஒன்றினை 1983, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியிட்டுள்ளது. அதில் கமலின் தந்தை இருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு பார்க்கையில் திமுகவினர் குறிப்பிடுவது போல 1959ல் கமலின் தந்தை இறக்கவில்லை.
மேலும், இது தொடர்பாக கமல்ஹாசன் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ராமுவை த் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கமல் அவர்களின் தந்தை 1991, நவம்பர் 7ம் தேதி இறந்தார் என்ற தகவலை நம்முடன் பகிர்ந்தார்.
2021 தேர்தல் விவரங்களின்படி சீமானுக்கு வயது 55. சீமான் 1966ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8ம் தேதி பிறந்தார். சலங்கை ஒலி திரைப்படம் வெளியானது 1983. அப்போது சீமானுக்கு 17 வயது இருந்திருக்கும். அவர் குறிப்பிடுவதைப் போலக் கல்லூரி படிக்கும் வயதுதான்.
எனினும், பரமக்குடியில் கமலின் தந்தையுடன் சேர்ந்து சீமான் திரைப்படம் பார்க்கச் சென்றார் என்பதை உறுதிப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது.
மேலும் படிக்க : அசுரனின் எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு சீமான் பாடிய நாட்டுப்புற பாடலை தழுவியது உண்மையே !
முடிவு :
நம் தேடலில், நடிகர் கமல்ஹாசனின் தந்தை பரமக்குடி சீனிவாசன் 1959, நவம்பர் 7ம் தேதி இறந்ததாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்புவது உண்மையல்ல. அவர், 1991, நவம்பர் 7ம் தேதி இறந்துள்ளார் என அறிய முடிகிறது.