கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் சமாதி, ஈழத் தமிழர்களுக்கோ வெறும் 5 கோடியில் வீடு எனப் பேசிய சீமான்.. உண்மை என்ன ?
பரவிய செய்தி
கருணாநிதியின் நினைவிடத்துக்கு ரூ. 39 கோடி நிதி செலவிட்டு சமாதி கட்டுவோம் என அரசு அறிவிக்கிறது. அது யாருடைய பணம்? ஆனால், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என்கிறீர்கள் – சீமான்
நேரலை 05-09-2021 பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை) https://t.co/tnc0l96wXT
— சீமான் (@SeemanOfficial) September 5, 2021
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருணாநிதியின் நினைவிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட நிதியையும் ஒப்பிட்டு பேசிய தகவலை பார்க்க முடிந்தது.
செப்டம்பர் 5-ம் தேதி பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ” ஐயா கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு ரூ. 39 கோடி நிதி செலவிட்டு சமாதி கட்டுவோம் என அரசு அறிவிக்கிறது. அது யாருடைய பணம் ? ஆனால், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என்கிறீர்கள் ” என 22.27வது நிமிடத்தில் பேசி இருக்கிறார்.
உண்மை என்ன ?
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை மேம்படுத்தும் பணிக்காக ரூ.39 கோடி ஒதுக்கியது. இது பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் எதிர்ப்பை பெறவும் செய்தது. கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கியதை போல் இம்முறை கருணாநிதி நினைவிடத்திற்கு திமுக அரசும் செய்திருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு நினைவிடங்களை அமைப்பது தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், ஈழத்தமிழர்களுக்கு வெறும் ரூ.5 கோடியில் மட்டுமே வீடுகள் கட்டித் தருவதாக சீமான் பேசியது தவறான தகவல்.
2021 ஆகஸ்ட் 27-ம் தேதி பிபிசியில் வெளியான செய்தியில், ” தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கென பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
1.முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில், முதற்கட்டமாக 3,510 வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.108.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2.முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும் இதுபோன்ற வசதிகளை செய்து தர, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ” என வெளியாகி இருக்கிறது.
முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் மட்டுமின்றி கல்வி உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ரூ.317 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து உள்ளார்.
மேலும் படிக்க : கருணாநிதி நீட்டை வாழ்த்தி கடிதம் எழுதியதாக பேசிய சீமான்.. உண்மை என்ன ?
இதற்கு முன்பாகவும், கருணாநிதி நினைவிடத்திற்கு ரூ.39 கோடி, ஆனால் பள்ளிக் கல்வித்துறைக்கு வெறும் ரூ.32 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டது.
மேலும் படிக்க : கருணாநிதி நினைவிடத்திற்கு ரூ.39 கோடி, பள்ளிக் கல்வித்துறைக்கு வெறும் ரூ.32 கோடி மட்டுமா ?
முடிவு :
நம் தேடலில், கருணாநிதிக்கு நினைவிடத்திற்கு ரூ.39 கோடியை அறிவித்த அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தர ரூ.5 கோடியே ஒதுக்கியுள்ளது என சீமான் பேசியது தவறான தகவல். முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகளை 231.54 கோடி செலவில் கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது என அறிய முடிகிறது.