கேப்டன் விஜயகாந்தின் தவசி படத்துக்கு வசனம் எழுதினேன் – சீமான்.. இயக்குநர் உதயசங்கரின் பதில் இதோ !
பரவிய செய்தி
இதெல்லாம் ஒரு பிழைப்பு, யார் இறப்பாங்க என்ன கதை சொல்லலாம்னு உக்காந்துருப்பாரு போல Mr. பொய்யன்..
மதிப்பீடு
விளக்கம்
நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28) உடல்நிலை மோசமானதையடுத்து இயற்கை எய்தினார். அதையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “நான் பார்த்த வரைக்கும் விஜயகாந்த்னாலே அச்சமின்மையும் துணிவும் தான். எதுக்கும் பயப்படமாட்டார். நெருக்கமா பழகுற வாய்ப்பு, அவர் நடிச்ச தவசி படத்தில் கிடைத்தது. அதற்கு நான் தான் உரையாடல் எழுதினேன். அதில் அவருடன் இருந்து பணி செய்து, மனம் திறந்து பேசிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்.” என்று கூறியிருந்தார்.
#WATCH | “கேப்டன் விஜயகாந்தின் தவசி படத்துக்கு வசனம் எழுதுனேன்”
– தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி#SunNews | #RIPCaptainVijayakanth | #CaptainVijayakanth | #Vijayakanth | #விஜயகாந்த் | #Seeman pic.twitter.com/5oZTlqf6mY
— Sun News (@sunnewstamil) December 29, 2023
இந்நிலையில் “தவசி படத்தின் டைட்டில் கார்டில், வசனம் எழுதியவர் இயக்குநர் உதயசங்கர் என்று தான் உள்ளது. சீமான் பொய் சொல்கிறார்” என்று கூறி திமுகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து, தவசி திரைப்படத்தின் இயக்குனர் உதயசங்கரிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசினோம். அப்போது திரைப்படத்தின் டைட்டில் கார்டில் வசனம் எழுதியது உதயசங்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, சீமான் தவறாக சொல்கிறார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். உண்மை என்ன என்பது குறித்து கேட்டதில், “இல்லை, சீமான் தான் தவசி படத்திற்கு வசனம் எழுதினார்.
அந்த காலக்கட்டத்தில் இயக்குநர் ஆவதற்கான முயற்சியில் அவர் இருந்ததால், வசனம் எழுதியது சீமான் என்று குறிப்பிட்டுவிட்டால், அவரை கதை ஆசிரியராக மாற்றி விடுவார்கள் என்று அவர் பெயர் போட வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. மேலும் அவர் எழுதிய First Version வசனங்களை வைத்து தான் ஷூட்டிங் போனோம். ஷூட்டிங்கின் போது வசனத்தில் ஏற்பட்ட பல திருத்தங்களை நான் தான் செய்தேன்.” என்று கூறினார்.
மேலும் வசனம் மட்டும் தானா, இல்லை கதையும் சீமான் எழுதினாரா என்ற கேள்விக்கு, “இல்லை வசனம் மட்டும் தான். கதை, தெலுங்கில் வெளிவந்த நரசிம்ம நாயுடு, இந்திரா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஒருவருடையது.
சீமான் டைட்டில் கார்டில் பெயர் போட வேண்டாம் என்று கூறியதால், நான் நன்றி என்று குறிப்பிட்டு மட்டும் அவர் பெயரை சேர்ந்துக் கொண்டேன்” என்று கூறினார்.
மேலும் படிக்க: வெள்ள நிவாரணத்தில் உதவித்தொகை கேட்ட சீமான் எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், நடிகர் விஜயகாந்தின் தவசி படத்துக்கு நான் தான் வசனம் எழுதினேன் என்று சீமான் கூறியவை பொய் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், அந்த படத்திற்கு சீமான் தான் வசனம் எழுதியுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.