சீமான் மதுபோதையில் மேடையில் பேசியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

பரவிய செய்தி

முழு போதையில் பிரச்சாரம் செய்யும் அதிபர் சீமான்.   

X link

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடித்து விட்டு மேடையில் பேசியதாக வீடியோ ஒன்றை திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். 

அதில், ”அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிசாமி தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாட்டைக் காப்போம்… எனக் எனக்குதான் பேசராப்படி. அதுதான் தமிழ்த் தேசியம்” என வாய் குளறிப் பேசுவது போன்று உள்ளது. 

உண்மை என்ன?

சீமான் மது அருந்திவிட்டுப் பேசியதாகப் பரவும் வீடியோவில் ’M nadu’ என்கிற லோகோ இருப்பதைக் காண முடிகிறது. அந்த யூடியூப் பக்கத்தில் இதே வீடியோ கடந்த 3ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில் சீமான் வாய் குளறிப் பேசுவது போன்று இல்லை. சாதாரணமாகவே பேசியுள்ளார். 

இந்த வீடியோ நாம் தமிழர் கட்சியின் திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷுக்கு வாக்கு கேட்டு பொன்மலையில் சீமான் பேசிய போது எடுக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முழு வீடியோ நாம் தமிழர் கட்சியின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் சீமான் வாய் குளறியெல்லாம் பேசவில்லை. 

அவர் பேசக் கூடிய வீடியோவின் வேகத்தைக் குறைத்து (slow motion) அவரது வாய் குளறுவது போல் மாற்றப்பட்டுள்ளது. அந்த முழு வீடியோவின் வேகத்தைக் குறைத்து (0.75) நாம் கேட்டுப்பார்த்ததில் அதனை உறுதி செய்ய முடிகிறது. இப்படி மாற்றப்பட்ட வீடியோவைத்தான் சீமான் மது அருந்திவிட்டுப் பேசுகிறார் எனத் தவறாகப் பரப்பப்படுகிறது. 

முடிவு : 

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மது அருந்திவிட்டு மேடையில் பேசியதாகப் பரவும் வீடியோ slow motion-க்கு மாற்றப்பட்டுள்ளது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader