அடுத்தமுறை பிரதமர் மோடியை நானே வரவேற்பேன் என சீமான் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி

அடுத்தமுறை பிரதமர் மோடியை நானே வரவேற்பேன். போஸ்டர்களில் மோடியின் படம் இடம்பெறாதது பெரும் அவமானம். மோடியை வரச்சொல்லிவிட்டு முதல்வர் நேரில் சென்று வரவேற்காமல் அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். அடுத்தமுறை பிரதமர் மோடியை நானே நேரில் சென்று வரவேற்பேன் – நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் !

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியின் புகைப்படம் விளம்பரங்களில் இடம்பெறாதது பெரும் அவமானம் என்றும், அடுத்தமுறை பிரதமர் மோடியை நானே நேரில் சென்று வரவேற்பேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக தந்தி டிவி சேனலின் நியூஸ் கார்டை திமுக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

தமிழ்நாட்டில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக வைக்கப்பட்ட விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாததால் பாஜகவினர் பிரதமர் படத்தை போஸ்டர்களில் ஒட்டினர். இதுதொடர்பாக, நீதிமன்றம் வரை சென்ற போது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

எண்ணூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில் போஸ்டர்களில் பிரதமர் படம் ஒட்டப்பட்ட விவகாரம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, ” பிரதமரை வரச் சொல்லி அழைப்பு விடுத்தது நீங்கள்(திமுக). கூப்பிட்டால் அவருக்கான உரிய மரியாதை அளிக்க வேண்டும். இது இத்தனை கோடி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா. எதிரியாக இருந்தாலும் வரச் சொல்லிட்ட, அப்போ பண்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். அதானே முறை.

பாஜக போஸ்டர்களில் பிரதமர் போட்டோவை ஒட்ட, இதெல்லாம் யாருக்கு அசிங்கம். நான் பாஜக மற்றும் திமுகவை எதிர்க்கிறேன். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. எதற்கு கூப்பிட்டு அவமரியாதை கொடுக்க வேண்டும். இதற்காக அவர்கள் நீதிமன்றம் செல்ல, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என தீர்ப்பு வர, உங்களுக்குத் தெரியாதா, என்ன நிர்வாகம் இது. இதை நான் கண்டிக்கிறோம் ” எனப் பேசியுள்ளார்.

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி சேனலில் தேடுகையில், ஆகஸ்ட் 1-ம் தேதி அவ்வாறான செய்தியே இடம்பெறவில்லை சமீபத்தில்  தந்தி டிவி பச்சை நிறத்தில் நியூஸ் கார்டுகளை வெளியிடவில்லை. பழைய நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்துள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், பிரதமர் மோடியை வரச்சொல்லிவிட்டு முதல்வர் நேரில் சென்று வரவேற்காமல் அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். அடுத்தமுறை பிரதமர் மோடியை நானே நேரில் சென்று வரவேற்பேன் என சீமான் கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader