தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று கர்நாடகா வந்து குண்டு வைப்பதாக பாஜக இணை அமைச்சர் சொன்ன பொய்!

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் இருந்து மக்கள் இங்கு வருகின்றனர். அங்கே பயிற்சி பெற்று இங்கு வந்து குண்டு வைக்கிறார்கள். – ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே

மதிப்பீடு

விளக்கம்

பெங்களூர், நாகர்ட்பேட் பகுதியில் பாஜகவினர் ’அனுமன் சாலிசா’ பாடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதில் கலந்து கொண்ட ஒன்றிய வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழ்நாட்டில் இருந்து மக்கள் கர்நாடகா வருகின்றனர். தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று கர்நாடகா வந்து குண்டு வைக்கிறார்கள் எனப் பேசியுள்ளார். 

உண்மை என்ன?

பெங்களூர் அருகேயுள்ள ராமேஸ்வரம் கஃபே-வில் கடந்த 1ம் தேதி குண்டு வெடித்தது. இதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகப் பெங்களூர் காவல் துறை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 8 தனிப்படைகளின் கீழ் குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்த வழக்கு மார்ச் 3ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது

இந்த வழக்கில் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் துணி வியாபாரம் செய்துவரும் ஷபீர் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து பெங்களூருவில் மினாஸ், ஷயீத் சமீல், அனஷ்த் இக்பால், ஷா ரஹ்மான் ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றே The Week, India Today, இந்து தமிழ் திசை போன்ற பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அமைச்சர் தமிழ்நாட்டிலிருந்து மக்கள் பயிற்சி பெற்று கர்நாடகா வந்து குண்டு வைக்கிறார்கள் எனப் பேசியதும் அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்புகள் எழத் தொடங்கியது.

எதிர்ப்பினை தொடர்ந்து ஷோபா கரந்தலாஜே தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்பதாகக் கூறி பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ‘எனது கருத்துக்கள் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்களை நோக்கியது மட்டுமே’ என்றுள்ளது. 

ஆனால், ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் என எவ்வித அதிகாரப் பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் ஒன்றிய பாஜக அமைச்சர் இப்படிப் பேசினார் எனத் தெரியவில்லை. 

இதிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் குண்டு வைத்தனர் என ஷோபா கரந்தலாஜே பேசியது தவறான மற்றும் ஆதாரமற்ற தகவலாகும். இதுவரை அப்படி எந்த தகவலும் வரவில்லை. 

முடிவு : 

தமிழ்நாட்டிலிருந்து மக்கள் பயிற்சி பெற்று கர்நாடகா வந்து குண்டு வைக்கிறார்கள் என ஒன்றிய பாஜக அமைச்சர் பேசியது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் கர்நாடகாவைச் சேர்ந்தவர்தான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றதாக எந்த தகவலும் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியாகவில்லை. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader