This article is from Feb 14, 2020

சீனாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களை சுட்டுக் கொல்வதாக பரவும் வீடியோ ?

பரவிய செய்தி

சீனாவின் போலீஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களை சுட்டுக் கொல்லும் காட்சி.

மதிப்பீடு

விளக்கம்

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை சுட்டுக் கொல்லும் நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டு வருவதாக வீடியோ மற்றும் புகைப்படமொன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்து இருந்தோம்.

வைரல் வீடியோ : 

வைரல் செய்யப்படும் வீடியோவில், முதல் பாகத்தில் சாலையில் நிற்கும் காருக்கே அருகே நிற்கும் 3 பேர் உடல் முழுவதும் மறைக்கப்பட்டு கையில் துப்பாக்கியுடன் புறப்படத் தயாராகிறார்கள், குடியிருப்பு பகுதியில் கையில் துப்பாக்கியுடன் மூன்று பேர் நடந்து செல்கிறார்கள், அடுத்த பாகத்தில் தரையில் இருக்கும் நோயாளிகளை பரிசோதித்து அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, மூன்றாம் பக்கத்தில் இறந்தவரின் உடலை கட்டி தழுவி ஒருவர் அழுது கொண்டிருக்கிறார்.

Twitter link | archived link 

1.போலீஸ் வீடியோ :

சீனாவைச் சேர்ந்த China Global Television Network உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சாலையில் போலீஸ் துப்பாக்கிகளுடன் இருப்பது மற்றும் குடியிருப்பு பகுதியில் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வைரல் செய்திக்கு போலீஸ் மறுப்பு தெரிவித்த தகவலை பதிவிட்டு உள்ளார்கள்.

Twitter link | archived link

Yiwu போலீஸ், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சுட்டுக் கொல்வதாக குற்றச்சாட்டுடன் கூறி இணையத்தில் பரவும் வீடியோக்கள் தவறானவை என மறுப்பு தெரிவித்து உள்ளார்கள். ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் வெறிபிடித்த நாய்களுடன் ஈடுபட்டதை தவறாக சித்தரித்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

2. தரையில் இருப்பவர்களை பரிசோதிக்கும் காட்சி : 

அடுத்ததாக, தரையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவக் குழுவினர் பரிசோதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அந்த வீடியோ 2020 ஜனவரி 25-ம் தேதி யூடியூப்-ல் வெளியாகி இருக்கிறது. அதிலும், துப்பாக்கி குண்டுகள் கேட்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், அப்பகுதியில் கேட்கும் சத்தம் துப்பாக்கி குண்டுகள் அல்ல, வானவேடிக்கை வெடிகள் வெடிக்கும் சத்தம் என்பதை கவனத்தினாலே புரியும்.

Youtube link | archived link 

3. மஞ்சள் சட்டை நபர் : 

வீடியோவில் இடம்பெற்ற காட்சியை வைத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடுகையில், பிப்ரவரி 11-ம் தேதி observers.france24 என்ற இணையதளத்தில் வைரலாக வீடியோவில் மூன்றாம் பாகத்தில் இருக்கும் பகுதி தொடர்பாக வெளியிட்டு உள்ளனர்.

” வுஹான் கிழக்கு பகுதியில் 200கிமீ தொலைவில் உள்ள வூசு எனும் சிறிய நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வூசு நகரில் வசிக்கும் நபரிடம் விசாரித்த பொழுது சம்பவம் குறித்து நேரில் பார்க்கவில்லை என்றாலும், நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலை தெரிவித்து உள்ளார். 2020 ஜனவரி 29-ம் தேதி சியுவான் பள்ளியின் முன்பாக இவ்வீடியோ எடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளார். தரையில் இருக்கும் நபர் பெண் அல்ல,  அவர் ஒரு இளைஞர். அவர் போலீசால் கொலை செய்யப்படவில்லை, மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கியவர் ” எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்து கிடப்பவரின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியாகி இருப்பதையும், அருகே இருக்கும் பகுதி உடைந்து இருப்பதையும் புகைப்படத்தில் பார்க்கலாம்.

4. சாலையில் விழுந்த நோயாளிகளின் புகைப்படமா :

சாலையில் அதிக அளவில் மக்கள் மொத்தமாக படுத்திருக்கும் புகைப்படமும் கொரோனா வைரசுடன் தொடர்புபடுத்தி பரப்பப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2014 மார்ச் reuters இணையதளத்தில் வெளியான புகைப்படம் கிடைத்துள்ளது.

அதில், ” 2014 மார்ச் 24-ம் தேதி ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் கட்ஸ்பாக் நாசி வதை முகாமில் பாதிக்கப்பட்ட 528 பேரை நினைவுகூரும் வகையில் ஒரு கலை திட்டத்தின் பகுதியாக சாலை பாதையில் மக்கள் படுத்துக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொல்ல சீனா நீதிமன்றத்தை நாடியதா ?

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை போலீசார் சுட்டுக்கொல்வதாக பரப்பி வரும் வீடியோ மற்றும் புகைப்படம் முற்றிலும் தவறானவை. வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை இணைத்து தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader