இராமநாதபுரத்தில் சித்தர் பறந்து வரும் அதிசய காட்சி எனத் தவறாக வைரலாகும் கிராபிக்ஸ் வீடியோ !

பரவிய செய்தி

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள புயல் காப்பகத்தில், இரவு காவலர்கள் தங்கி இருந்த போது, நடு இரவில் ஒரு சித்தர் (சிவனடியார்) பறந்து வந்த காட்சிகள் வைரல்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள புயல் காப்பகத்தில் கடந்த நவம்பர் 27ம் தேதியன்று இரவு காவலர்கள் தங்கி இருந்த போது, சித்தர் ஒருவர் பறந்து வருவதை வீடியோ எடுத்ததாக 27 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archive link 

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில், வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்து பார்க்கும் போது வெளியே இருந்த வாகனத்தின் மீது உருவம் ஒன்று தென்படுகிறது. அந்த உருவம் சிறிது நேரத்தில் பறப்பதும், அந்த உருவத்தின் கண் பகுதி மிளிர்வதையும் பார்க்க முடிகிறது. இறுதியாக, அந்த உருவம் பறந்து வரும் போது ஜன்னல் ஓரத்தில் இருந்து வீடியோ எடுப்பவர் பயந்து ஓடுவது போல் வீடியோ முடிவடைகிறது.

சித்தர் பறந்து வருவதாக வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2022 ஆகஸ்ட் 27ம் தேதி ” Joseph Njovu visuals” எனும் யூடியூப் பக்கத்தில் ” கேமராவில் சிக்கிய சூனியக்காரி ” எனும் தலைப்பில் இவ்வீடியோவின் பகுதி பதிவாகி இருக்கிறது.

இந்த வீடியோ குறித்த விளக்கப் பகுதியில், ” கேமராவில் பதிவான சூனியக்காரி உருவம் எவ்வாறு பறந்து வருவது போல் உருவாக்கப்பட்ட என்பதை விவரிக்கும் காட்சிகள் ” குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின், கடந்த செப்டம்பர் 24ம் தேதி ” Joseph Njovu visuals” யூடியூப் பக்கத்தில் ” VFX tutorial | flying witch caught on camera Cinema 4d and after effects.” எனும் தலைப்பில் வைரல் வீடியோ பற்றி 19 நிமிட விளக்க வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

Joseph Njovu visuals யூடியூப் பக்கத்தில் இப்படி VFX செய்யப்பட்ட பல்வேறு வீடியோக்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த வீடியோ உண்மையானது என நைஜீரியா, கொலம்பியா, பாகிஸ்தான், இந்தியா என பல்வேறு நாடுகளில் தவறாக பரவி இருக்கிறது.

மேலும் படிக்க : Is the flying witch caught on camera real?

கடந்த மாதமே, பறக்கும் சூனியக்காரி கேமராவில் பதிவாகி உள்ளதாக இவ்வீடியோ இந்திய அளவில் வைரலான போது, இதுகுறித்து யூடர்ன் ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள புயல் காப்பகத்தில் நடு இரவில் ஒரு சித்தர் பறந்து வந்த காட்சி எனப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ ஏற்கனவே சூனியக்காரி பறப்பதாக வைரலானது. அது VFX மூலம் எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோ என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader