பாடகர் எஸ்.பி.பி கொரோனாவில் குணமாகியதாக வதந்தி !
பரவிய செய்தி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த SPB என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபல பாடகர் பாலசுப்பிரமணி முழுமையாக குணம் அடைந்தார்..
மதிப்பீடு
விளக்கம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கொரோனா வைரஸில் இருந்து குணமாகியதாகவும், கொரோனா நெகட்டிவ் என வந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஊடகங்களில் வெளியான செய்தியால் எஸ்.பி.பி குணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கின.
இந்நிலையில், எஸ்.பி.பிக்கு கொரோனா வைரஸ் நெகட்டிவ் என வெளியான செய்திகள் குறித்து அவரின் மகன் எஸ்.பி.சரண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
” எப்போதும் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே தந்தையின் உடல்நலம் குறித்த வீடியோவை வெளியிடுவேன். ஆனால், இன்று அவருக்கு கோவிட்-19 நெகட்டிவ் வந்துவிட்டதாகக் கூறி தகவல்கள் பரவின. நெகட்டிவ் அல்லது பாசிட்டிவ் என்பது விஷயமல்ல. அவர் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார். எனவே, தவறான செய்திகளை பதிவிடுபவர்கள் கவனமாக இருங்கள். அவரின் உடல்நலம் குறித்த தகவல்கள் எனக்கே முதலில் வரும் ” எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், எஸ்.பி.பிக்கு கோவிட்-19 நெகட்டிவ் என வந்தது உண்மையா அல்லது பொய்யா என விளக்கம் அளிக்கவில்லை. எஸ்.பி.பி முழுமையாக குணமடைந்தார் என்கிற தகவல் தவறானது எனத் தெரிவித்து இருக்கிறார். தற்போதும் எஸ்.பி.பி வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார். இதற்கு முன்பும், எஸ்.பி.பி கொரோனா பாதிப்பால் இறந்து விட்டதாக வதந்தியை பரவியது குறிப்பிடத்தக்கது.