பத்மஸ்ரீ விருது வாங்கியதால் தான் ஸ்ரீ தேவிக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டதா ?

பரவிய செய்தி
சமீபத்தில் துபாயில் இறந்த நடிகை ஸ்ரீ தேவியின் இறுதி அஞ்சலியில் அவருக்கு தேசிய கொடியை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. அதற்கு காரணம் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கு இவ்வாறு மரியாதை செலுத்துவது வழக்கம்.
மதிப்பீடு
சுருக்கம்
குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்து இறந்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்துவதாக அறிவித்தால் அவர்கள் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தலாம்.
விளக்கம்
கடந்த மாதம் 24-ம் தேதியன்று துபாயில் இறந்த நடிகை ஸ்ரீ தேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மகாராஷ்டிராவின் அரசு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதையை செலுத்தியது.
இந்த விவகாரம் நாட்டில் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி, ஒரு நடிகைக்கு எவ்வாறு தேசிய கொடியை போர்த்தலாம் என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில், “ பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்துவது வழக்கம்.. வரலாற்றை படித்தி விட்டு வாங்க ” என்று பதிவிடப்பட்டது..
இது முற்றிலும் தவறாகும். பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களின் இறுதி அஞ்சலியில் அனைவருக்கும் தேசியக் கொடியை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டதா ? என்றால், இல்லை என்று தான் பதில். பிறகு எவ்வாறு ஒரு நடிகைக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
நாட்டின் முன்னாள் அல்லது பதவில் இருக்கும் குடியரசுத்தலைவர், பிரதம அமைச்சர், யூனியன் அமைச்சர்கள், மாநிலத்தின் முதலமைச்சர் ஆகியோரின் இறப்பு அரசின் இறுதிச்சடங்காக அறிவிக்கப்படும். அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகளின் சத்தம் முழங்க, தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு, அவர்களின் இறப்பு மாநிலத்தின் அல்லது நாட்டின் துக்கம் கடைபிடிக்கும் நாளாக அறிவிக்கப்படும்.
தற்போது விதிமுறைகள் மாற்றப்பட்டு, மாநிலத்தின் முதலமைச்சருக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த எத்தகைய மனிதருக்கு அரசு மரியாதையை செலுத்த வேண்டும் என்பதை மாநில முதலமைச்சர் முடிவு செய்ய இயலும் என்று முன்னாள் சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரம் அமைச்சர் எம்.சி.நனையா தெரிவித்துள்ளார்.
அரசியல், இலக்கியம், சட்டம், அறிவியல் மற்றும் சினிமா போன்ற துறைகளில் இறந்தவர்களுக்கு அவர்களின் துறை பங்களிப்பை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அரசு மரியாதை செலுத்த முடிவெடுக்க இயலும்.
உதரணமாக, 98 வயதான இந்தியாவின் மூத்த விமானப்படைத் தளபதி அர்ஜுன் சிங் மரணத்தின் போது 17 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் தேசிய கொடி போர்த்தப்பட்டு அரசு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேவின் அரசு இறுதிச்சடங்கு மும்பையின் சிவாஜி பார்க்கில் நடைபெற்றது. பால் தாக்கரே சட்டமன்ற உறுப்பினர் பதவில் இல்லையென்றாலும், அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் அரசு மரியாதை வழங்கப்பட்டது.
தேசிய கொடிக்கு தகுந்த மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசிலமைப்பு சட்டம் கூறுகிறது. Emblems and name ( prevention and improve use) Act, 1950 மற்றும் Prevention of insults to the national honour Act 1971 என்கிற இரு சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் அரசு மரியாதை மகாத்மா காந்திக்கு அளிக்கப்பட்டது. எனினும், மக்களின் மீது கொண்ட அன்பால் சமூக சேவையாற்றிய அன்னை தெரசா அவர்களுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. மேலும், ஆன்மீக தலைவர் சத்திய சாய் பாமா, கங்குபாய் ஹான்கள், பீம்சென் ஜோஷி ஆகியோருக்கும் சமீபத்தில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால், அரசு மரியாதைக்கும் பத்மஸ்ரீ விருதிற்கும் தொடர்பில்லை. மேலும், சினிமா துறையில் முக்கிய பங்களிப்பை அளித்ததற்கு தான் நடிகை ஸ்ரீ தேவிக்கு தேசிய கொடியுடன் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.