இலங்கையில் உள்ள அனுமனின் பிரம்மாண்ட பாதமா ?
பரவிய செய்தி
இலங்கையில் உள்ள அனுமன் பாதம். ஷேர் பண்ணுங்க. நல்ல செய்து வீடு தேடி வரும்.
மதிப்பீடு
விளக்கம்
இராமாயணத்தில் வரும் அனுமனின் பிரம்மாண்ட பாதச்சுவடுகள் இலங்கையில் இருப்பதாகக் கூறும் மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்தால் நல்ல செய்தி வீடு தேடி வரும் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
கடந்த சில ஆண்டுளாகவே, இலங்கையில் இருக்கும் அனுமனின் பிரம்மாண்ட பாதச்சுவடுகள் என இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன. இந்து மதக் கடவுள்களின் புகைப்படத்தை பதிவிட்டு இந்த பதிவை பகிர்ந்தால் நல்ல செய்தி வரும் எனக் கூறுவது லைக், ஷேர்க்காக அதிகம் பயன்படுத்திய ஒருவிதமான முறையாகும்.
இலங்கையில் உள்ள அனுமனின் பிரம்மாண்ட பாதச்சுவடுகள் எனப் பரப்பப்படும் இப்படத்தை தாய்லாந்து நாட்டில் இருப்பதாக முன்பே சமூக வலைதளங்கள், ஆன்மீக இணையதளங்களில் பதிவிட்டு உள்ளனர். எனினும், மேற்காணும் புகைப்படம் தாய்லாந்து நாட்டில் எங்குள்ளது என்பது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. தாய்லாந்தில் இருப்பதாக பதிவிட்டு வருபவர்களும் எந்த கோவிலில், மலையில் இருக்கிறது எனக் குறிப்பிடவில்லை. ஆகையால், அதை உறுதி செய்ய முடியவில்லை.
இந்த ஒரு புகைப்படம் மட்டுமின்றி, ஆந்திராப் பிரதேசம், இலங்கை, தாய்லாந்து மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அனுமனின் பிரம்மாண்ட பாதச்சுவடுகள் இருப்பதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக ஜீ நியூஸ் இணையதளத்தில் வெளியாகி இருந்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள லேபாக்சி கோவிலில் அனுமனின் பிரம்மாண்ட பாதச்சுவடு இருப்பதாக சில புகைப்படங்கள் பரவி வருகின்றன. ஆனால், கீழ்க்காணும் வீடியோவில் 14.10-வது நிமிடத்தில் லேபாக்சியில் பாறையில் இருக்கும் பாதச்சுவடுகளை சீதா மாதாவின் கால்தடம் எனக் கூறி இருக்கிறார்கள். சில வீடியோக்களில் அவ்வாறே குறிப்பிட்டு உள்ளனர்.
இதுபோல், தென் ஆப்ரிக்கா, பராகுவே உள்ளிட்ட பல பகுதிகளில் பாறைகளில் ஆச்சரியமூட்டும் பிரம்மாண்ட பாதச்சுவடுகள் இருப்பதாக பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், இணையத்தில் இடம்பெற்றுள்ளன. அவையெல்லாம் புரியாத, விளக்கப்படாதவை, வதந்தியாகவும் கூட இருக்கலாம்.
அனுமனின் பாதச் சுவடுகள் இருப்பதாக நம்புவது பக்தர்களின் நம்பிக்கை. அதை விமர்சிக்கவோ, கூடாது என்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை. எனினும், சில நேரங்களில் தவறான தகவல்களை மக்கள் நம்பக் கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டிய கடமை உள்ளது. ஒவ்வொரு புகைப்படத்திற்கு இடையே பாதச் சுவடுகள் அளவுகளில் வேறுபாடுகள் உள்ளன. வைரலாகும் பாதச்சுவடு எங்கு இருக்கிறது என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை.
இதற்கு முன் இலங்கையில் அனுமனின் கதாயுதம் கண்டெடுக்கப்பட்டதாகவும் மற்றும் பாண்டவர்களில் ஒருவரான பீமன் மகனுடைய ராட்சத எலும்புக்கூடுகள் கிடைத்து உள்ளதாகவும் வதந்திகள் பரவி இருந்தன. ஆக, லைக், ஷேர்க்காக கடவுள்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது எதார்த்தம் என்பதை அறிவீராக.