இலங்கை மலையகத்தில் 10,000 பள்ளிகள் இருப்பதாக அண்ணாமலை சொன்ன தவறான தகவல் !

பரவிய செய்தி

மலையகம் பகுதிகளில் இருக்கக் கூடிய 10,000 பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு பை, பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. – அண்ணாமலை

மதிப்பீடு

விளக்கம்

லங்கையில் உள்ள மலையகத்திற்கு தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு தேயிலை தோட்டம் உருவாக்கப்பட்டது. மலையகத்திற்கு அவர்கள் சென்று 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை சென்னை திரும்பியதும் செய்தியாளர் சந்திப்பில் பேசியது, “மலையகம் பகுதிகளில் இருக்கக் கூடிய 10,000 பள்ளிகள். அதிகமாகத் தமிழ்ப் பள்ளிகள் தான் உள்ளன. அதிகமாகத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள். அந்த 10,000 பள்ளிகளுக்கும், அப்பள்ளியில் இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு பை, பாடப் புத்தகங்கள், தண்ணீர் பிரச்சனை உள்ள பள்ளிகளுக்கு ஆர்.ஓ. ப்ளான்ட் இவற்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்”. 

உண்மை என்ன ? 

இலங்கை மலையகத்தில் உள்ள பள்ளிகள் குறித்து அண்ணாமலை பேசியது தொடர்பாக ஆய்வு செய்ததில் 10,000 பள்ளிகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பதை அறிய முடிந்தது. 

இலங்கையிலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு அரசு கடந்த 2021ம் ஆண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒட்டு மொத்த இலங்கையில் 10,146 அரசுப் பள்ளிகள் உள்ளன. மலையகம் என்பது இலங்கையில் ஒரு சிறிய பகுதி. 

மேலும் இலங்கையில் உள்ள மொத்த தமிழ்ப் பள்ளிகள் 2,297. அதேபோல் முழுமையாகத் தமிழ்வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகள் 3,026. அதுமட்டுமின்றி சிங்கள மற்றும் தமிழ் வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் 40, சிங்கள மற்றும் இருமொழி (English – Bilingual) பள்ளிகள் 552, தமிழ் மற்றும் இருமொழி (English – Bilingual) பள்ளிகள் 170, மும்மொழி பள்ளிகளாக 35 இயங்குகின்றன. இவற்றைத் தவிர்த்து சிங்கள வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் 6,323 உள்ளன.

மேலும் 2,297 தமிழ்ப் பள்ளிகளில் 5,71,358 மாணவர்கள் பயில்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையகம் என்பது கொழும்பு, காலி, நுவரேலியா, மாத்தளை, கண்டி, பதுளை, ரத்தனபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளை கொண்ட ஒரு இடமாகும். 

நவம்பர் 2ம் தேதி இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம் மேற்கொண்டது தொடர்பாக ‘ஆல் இந்தியா ரேடியோ‘ தங்களது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ‘தோட்டப் பகுதிகளில் உள்ள 10,000 பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் அளிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ‘Srilanka Mirror’ என்னும் தளத்தில் இது குறித்து வெளியான செய்தியிலும் 10,000 பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டதாக உள்ளது.

பத்தாயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டத்தை 10,000 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கியதாக அண்ணாமலை தவறாகக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பொய்களின் தொகுப்பு !

இதற்கு முன்னர் அண்ணாமலை பேசிய பொய்கள் பற்றிய உண்மைகள் யூடர்னில் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசிய பொய் !

முடிவு : 

நம் தேடலில், இலங்கை மலையகம் பகுதியில் 10,000 பள்ளிகள் இருப்பதாக அண்ணாமலை பேசிய தகவல் தவறானது. அந்நாட்டு அரசு தரவின்படி ஒட்டு மொத்தமாக 10,146 அரசுப் பள்ளிகளே அந்நாட்டில் உள்ளன. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்ற போது 10,000 பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய நலத்திட்டத்தை 10,000 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கியதாக அண்ணாமலை தவறாகக் கூறியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader