பஸ் டிரைவராக பணியாற்றும் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சூரஜ் ரந்திவ் !
பரவிய செய்தி
2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய சூரஜ் ரந்திவ் தற்போது மெல்போர்னில் பஸ் டிரைவராக உள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சூரஜ் ரந்திவ் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கிரிக்கெட் வீரரான சூரஜ் ரந்திவ் பஸ் டிரைவராக பணிபுரியும் செய்தி இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
சூரஜ் ரந்திவ் தவிர, சிந்தக ஜெயசிங்கா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இருந்த வாடிங்டன் மவேங்கா ஆகியோரும் இதே பணியைச் செய்து வருகின்றனர். மூன்று பேருமே டிரேன்ஸ்தேவ் எனும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இம்மூவரும் உள்ளூர் கிரிக்கெட் கிளப் ஒன்றில் விளையாடி வருகிறார்கள். எனினும், ஆஸ்திரேலியாவில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பஸ் டிரைவராக வேறுபட்ட பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
2011-2012-ல் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சூரஜ் ரந்திவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்துள்ளார். அதன் பின், 2016-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்து இருக்கிறார்.
9 News Australia செய்திக்கு ரந்திவ் அளித்த பேட்டியில், ” சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் போது ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு டெஸ்ட் பயிற்சியில் உதவ ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேட்டுக் கொண்டதாகவும், அதற்காக உதவியதாகவும் ” கூறியுள்ளார்.
சூரஜ் ரந்திவ், சிந்தக ஜெயசிங்கா மற்றும் வாடிங்டன் மவேங்கா ஆகிய மூன்று பேரும், போக்குவரத்து அமைச்சர் பென் கர்ரோல் மற்றும் டிரேன்ஸ்தேவ் நிறுவன தரப்பினர் என ஒன்றிணைந்து 9 News Australia தரப்பில் பிரத்யேக பேட்டி உருவாக்கப்பட்டு உள்ளது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் பஸ் டிரைவராக பணியாற்றும் தகவல் இந்திய ஊடக செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.