ஸ்ரீநகரில் பயங்கரவாதியை கைது செய்யும் பரபரப்பான வீடியோவா ?
பரவிய செய்தி
ஸ்ரீநகரில் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
மதிப்பீடு
விளக்கம்
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதியை பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வளைத்து பிடிக்கும் காட்சி என 16 நொடிகள் கொண்ட வீடியோ முகநூல் உள்ளிட்டவையில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Kashmir தீவிரவாதியை தாவி மிதித்து பிடித்த போலிஸ் உண்மை ஹீரோ pic.twitter.com/iRcboRTpCc
— Kalyan (@BjpKalyaan) August 14, 2021
வீடியோவில், வேகமாக காரில் வரும் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளியதில் கீழே விழுந்த அந்த நபர் வாகனத்தின் அருகே நிற்கையில் காரில் இருந்து இறங்கி வரும் காவலர் ஒருவர் ஓடி வந்து நிற்பவரின் மீது மிதித்து பிடிக்கும் காட்சி பதிவாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 ஆகஸ்ட் 2-ம் தேதி obemdito எனும் இணையதள செய்தியில் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
பிரேசிலில் உள்ள பெரோலா நகரின் பல தெருக்களில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை போலீசார் எச்சரிக்கை செய்தும் வாகனத்தை நிறுத்தாத காரணத்தினால் போலீசார் துரத்தி பிடித்து கைது செய்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ஆகஸ்ட் 2-ம் தேதி RIC More எனும் யூடியூப் சேனலில் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க பார்த்த இளைஞரை போலீசார் வாகனத்தால் இடித்து கைது செய்யும் காட்சியை மற்றொரு கோணத்தில் எடுத்த வீடியோ பதிவாகி இருக்கிறது.
ஸ்ரீநகரில் பயங்கரவாதியை கைது செய்யப்பட்ட சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா எனத் தேடுகையில், ” ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் ” என ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியா டுடே செய்தி வெளியிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதியை கைது செய்யும் காட்சி என வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்டது, ஸ்ரீநகரில் இல்லை என அறிய முடிகிறது.